அமைச்சரவை மாற்றம்: இனி நான் செய்யப்போவது இது தான்... பிடிஆர் டக்குனு போட்ட ட்வீட்!

PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2023, 12:39 PM IST
  • நிதியமைச்சராக இருந்தது என் வாழ்வின் சிறந்த பகுதியாகும் - பிடிஆர்
  • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட வாழ்த்துகிறேன் - பிடிஆர்
  • ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - பிடிஆர்
அமைச்சரவை மாற்றம்: இனி நான் செய்யப்போவது இது தான்... பிடிஆர் டக்குனு போட்ட ட்வீட்! title=

PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சா.மு. நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இன்று ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துகொண்டார். 

இதையடுத்து, அமைச்சரவையில் இலாக்கா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோரின் இலக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. மு.பெ. சாமிநாதனுக்கு கூடுதல் இலாக்கா வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பிடிஆர் தற்போது,  தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில், துறை மாற்றம் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் டீவிட் ஒன்றை பதிவிட்டார். அதில், தனக்கு முன் அனுபவம் உள்ள துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை தற்போது ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், துறை மாற்றம் செய்யப்பட்ட சக அமைச்சர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.   

அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பின்வருமாறு: "கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். 

மேலும் படிக்க | TN Cabinet: அமைச்சரவையில் அதிரடி மாற்றம் - நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து பிடிஆர் விடுவிப்பு!

வாழ்வின் சிறப்பான பகுதி

முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன். 

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

நம்பர் 1 துறை 

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலாக்காவை முதலமைச்சர் ஸ்டாலின் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம். 

தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். 

IT துறையுடனான தொடர்பு

எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். 

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

தங்கம் தென்னரசுக்கு வாழ்த்து

இன்று பொறுப்பேற்கும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் படிக்க | Minister TRB Raja: அமைச்சராக பொறுப்பேற்றார் டிஆர்பி ராஜா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News