நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவிக்கான இடங்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Last Updated : Dec 19, 2019, 08:14 AM IST
நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழக அரசு title=

தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர் பதவிக்கான இடங்கள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக அரசு, நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில்,

121 நகராட்சிகளில், நகராட்சி தலைவர் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி தலைவர் பதவி, பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

9 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.  இதேபோல், நெல்லிக்குப்பம், அரக்கோணம், நெல்லியாலம், ஆத்தூர், திருவேற்காடு, நரசிங்கபுரம், கூத்தாநல்லூர், மறைமலைநகர் ஆகிய 8 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் ஆதிதிராவிட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அந்த இனத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் போட்டியிடலாம். இது தவிர, ஆம்பூர், குடியாத்தம், வந்தவாசி, விழுப்புரம், விருதுநகர், செங்கோட்டை, பொள்ளாச்சி, பெரியகுளம், கும்பகோணம்,  நாகை, அறந்தாங்கி உள்ளிட்ட 51 நகராட்சிகளின் தலைவர் பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள இந்த நகராட்சிகளை தவிர மற்ற அனைத்து நகராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு அனைத்து பிரிவை சேர்ந்த இரு பாலாரும் போட்டியிடலாம். 

Trending News