தேசிய பள்ளி விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களே இல்லை... அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2023, 09:47 PM IST
  • தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டி ஜூன் 6 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • இதில் மாணவர்கள் பங்கேற்றால், அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
  • ஆனால், தற்போது நடைபெறும் 66ஆவது விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என தகவல்.
தேசிய பள்ளி விளையாட்டு போட்டி: தமிழக வீரர்களே இல்லை... அரசு எடுத்த அதிரடி ஆக்‌ஷன்! title=

66th National School Games: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது, டெல்லி, மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் யாருமே கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதில், கலந்துக்கொண்டு பதக்கங்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும் பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் இதற்காக வழங்கப்படுகிறது. 

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் ஆண்டுத்தோறும் தேசிய அளவில் நடத்தப்படுகிறது. ஒட்டப்பந்தயம், பேட்மிட்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், நீச்சல், கேரம், செஸ், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, கபடி, துப்பாக்கிச்சூடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்களில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதிப்பெற்றவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவர். 

மேலும் படிக்க | அம்பத்தூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பாதிப்பு!

அதில் அவர்கள் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் மதிப்பெண் உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப தேசிய விளையாட்டு கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பும். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குனர், விளையாட்டு வீரர்களை தேர்வுச் செய்து பட்டியலை அனுப்பி வைப்பார். 

இந்த வகையில் இந்த ஆண்டு 247 மாணவர்களை தேர்வு செய்து மே 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கான கடிதம் கடந்த மே 11ஆம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தப்போது, பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்த கடிதம் முறையாக சென்று சேரவில்லை. தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும் இந்த ஆண்டு அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும் பொழுது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின் போது வழங்கப்படும். 

தற்போது இந்த ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத சூழல் காரணமாக விளையாட்டு பிரிவில் மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பினை இழந்தனர். இந்நிலையில், தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) ஜூன் 6ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை 66ஆவது தேசிய பள்ளி விளையாட்டுகளை டெல்லி, மத்திய பிரதேசத்தில் நடத்துகிறது. 2022-2023 வெளிப்புற விளையாட்டு சீசனில் 19 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர் பிரிவுகளில் 21 விளையாட்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | CM Stalin Delta Visit: மின் கட்டண உயர்வுக்கு யார் காரணம்? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News