நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளாக அரசு வெளியிடாதது ஏன்? HC

நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன்? தகுந்த விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2019, 04:52 PM IST
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளாக அரசு வெளியிடாதது ஏன்? HC title=

சென்னை: நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டதால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்விகளை எழுபியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றாமல் திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் மத்திய அரசு நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த விசியத்தை தமிழக அரசு வெளியிடவில்லை. கடந்த 19 மாதங்கள் ஆகியும் அதுக்குறித்து எந்தவித செய்தியும் தமிழக அரசு வெளியிடவில்லை. நீட் பற்றி கேட்கும் போதெல்லாம், தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றே பதில் அளித்து வந்தனர் முதல்வர் உட்பட தமிழக அமைச்சர்கள்.

ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திட்டவட்டமாத் தெரிவித்தார்.

ஆனால் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா சம்பந்தமான 2 மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரவில்லை. அதை நிராகரித்துள்ளார் என 2017 செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதியே மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது என்ற செய்தி வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது.

மத்திய அரசிடம் நிராகரிப்பு கடிதம் வந்து 19 மாதங்கள் ஆகியும், அதுக்குறித்து ஏன் தமிழக அரசு பதிலளிக்கவில்லை என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வு மசோதாக்கள் முறைப்படி நிராகரிக்கப்பட்டு வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம். நீட் தேர்வு விலக்கு நிராகரிக்கப்படவில்லை. அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி முறைப்படி தகவல் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். நீட் தேர்வு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதுவரை விளக்கம் கேட்டு 12 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் நீட் மசோதாக்களை நிராகரித்த காரணத்தை இதுவரை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. எனவே உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருவோம். அதில் தமிழக அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தலைவரிடம் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர உத்தரவுட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது நீதிபதி, நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலை 2 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாதது ஏன்? மசோதா நிராகரிக்கப்பட்டதால் புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? கடிதம் பெற்றுக்கொண்டதை குறித்து ஏன் இணையத்தளதில் வெளியிடவில்லை. நீட் குறித்து தமிழகத்தில் மக்கள் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நீட் நிராகரித்த விவகாரத்தை வெளியில் ஏன் தமிழக அரசு கூறவில்லை? என கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இவை அனைத்திற்கும் தகுந்த விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. மேலும் வழக்கை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Trending News