துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு? பலி 90 பேர்

Last Updated : Jul 16, 2016, 12:47 PM IST
துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிப்பு? பலி 90 பேர் title=

துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.

தலைநகர் அங்காராவில் ஜனாதிபதி எர்டோகன் இல்லாத சூழ்நிலையில் துருக்கியில் நேற்று மாலை திடீர் ராணுவ புரட்சி ஏற்பட்டது. தலைநகரில் உள்ள முக்கிய அலுவலகங்கள், விமான நிலையங்களை ராணுவம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து துருக்கி முழுவதும் ராணுவ சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக ராணுவம் அறிவித்தது. இதனால், அதிபர் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ராணுவத்தின் இந்த தாக்குதலில் இதுவரை 90 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் ஜனாதிபதி எர்டோகன் இன்று அதிகாலை விமானம் மூலம் இஸ்தான்புல் திரும்பினார். அவர் ஸ்கைப், பேஸ்டைம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். துருக்கி பிரதமர் பினாலியும் ஸ்கைப் மூலம் மக்களை தொடர்பு கொண்டு பேசினார்.

ஜனாதிபதியும் பிரதமரும் மக்களிடம் பேசுகையில்:- நாங்கள் ஆட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறோம். மக்கள் பயப்பட வேண்டாம். ராணுவத்தில் ஒரு பிரிவினர் மட்டும் இந்த துரோக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை பிடிக்க நினைக்கும் அவர்களது முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. ராணுவ புரட்சிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்த நிலையில், துருக்கியில் ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்தார். ராணுவ ஆட்சிக்கு சதி செய்ததாக 200 ராணுவ வீரர்களை அரசு கைது செய்தது. முன்னாள் ராணுவத் தளபதி ஹூலுசி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Trending News