லெபனானுக்கு கொடூரமான நாள்... 182 பேர் பலி; தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - சூழும் போர் மேகங்கள்

Israel Air Strikes On Lebanon: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் தற்போது 182 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 23, 2024, 08:08 PM IST
  • கடந்த 11 மாதங்களாக ஹிஸ்புல்லா குழுவுடன் இஸ்ரேல் மோதி வருகிறது.
  • கடந்த 11 மாதங்களில் லெபனானுக்கு இன்று மிக கொடூரமான நாளாகும்.
  • லெபனான் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல இஸ்ரேல் அறிவுறுத்தல்
லெபனானுக்கு கொடூரமான நாள்... 182 பேர் பலி; தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் - சூழும் போர் மேகங்கள் title=

Israel Air Strikes On Lebanon: இஸ்ரேல் நாடு லெபனான் நாட்டின் மீதான தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தெற்கு லெபனான் பகுதியில் இன்று (செப். 23) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், மருத்துவம் சார்ந்த பணியார்கள் உள்பட 182 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் லெபனான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்

இஸ்ரேல் நாடு ஹிஸ்புல்லா போராளி குழுவினரை (Hezbollah Group) குறிவைத்து நடத்தும் இந்த தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு அதன் ஆயுதங்களை பதுக்கிவைத்துள்ள இடங்களை நோக்கியே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

80 ஆயிரம் அழைப்புகள்

மக்கள் உடனடியாக வேறு இடங்களுக்கு குடிப்பெயரும்படி 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் இஸ்ரேலிய நாட்டில் இருந்து லெபனானுக்கு (Lebanon) வந்திருப்பதாக லெபனான் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலில் (Israel) இருந்து லெபனான் நாட்டு மக்களுக்கு வரும் இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் அழிவு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் உளவியல் ரீதியான போர் என Ogero எனும் லெபனானின் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் இமாத் க்ரீடீஹ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான இந்த மோதல் தீவிரமடையும் இந்த சூழலில், இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Israeli Prime Minister Benjamin Netanyahu) இன்று,"நமக்கு முன் பெரும் சிக்கலான நாள்கள் காத்திருக்கின்றன" என பேசியிருந்தார். வடக்கு பகுதியில் அதிகாரம் சமநிலைக்கு திரும்பும் என தான் வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதுதான் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் நெதன்யாகு கூறினார். மேலும், இஸ்ரேலிய நகரங்கள் மற்றும் பொதுமக்களை இலக்காகக் கொண்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை நாங்கள் அழித்து வருகிறோம் என நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

லெபனானுக்கு கொடூரமான நாள்

சமீபத்திய இந்த தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல் ஹிஸ்புல்லா குழுவுக்கு எதிராக இஸ்ரேலின் முழுமையான போரை நோக்கிய நகர்வை காட்டுகிறது எனலாம். கடந்த 11 மாதங்களாக இஸ்ரேல் - ஹிஸ்புல்லா குழுவுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஹிஸ்புல்லா போராளி குழுவிற்கு எதிராக இன்று மட்டும் 300 இலக்குகளை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. லெபனான் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 182 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் தெரிகிறது. 

கடந்த அக்டோபரில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா குழுவுக்கு இடையே மோதல் தொடங்கிய நிலையில், இன்றைய நாள்தான் லெபனானுக்கு மிகவும் கொடூரமான நாளாக அமைந்துள்ளது எனலாம். பெய்ரூட், திரிபோலி, கிழக்கு மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் உள்ள பள்ளிகளை தங்குமிடங்களாக மாற்ற லெபனான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. .

சூழும் போர் மேகங்கள்

இஸ்ரேலிய இராணுவம் (Israel Defence Force) லெபனானில் தனது தாக்குதல் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள 17 கிராமங்கள் மற்றும் நகரங்களை குறிக்கும் வரைபடத்தையும் அது வெளியிட்டது. இருப்பினும், அவர்களில் எதை அவர்கள் குறிவைக்கிறார்கள் என்பதை வெளியிடவில்லை. 

ஹிஸ்புல்லா குழு தனது ஆயுதங்களை பதுக்கி வைக்கும் இடங்கள் உள்பட அதன் ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தும் கட்டடங்கள் மற்றும் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் லெபனான் மக்கள் தங்களின் நலனை கருதி உடனே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி உள்ளது. 

ஹிஸ்புல்லா குழுவின் தகவல் தொடர்பு நெட்வோர்க்கை குறிவைத்து நடத்திய ரகசிய தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அந்த குழுவை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில் மக்களை வெளியேற்றும் முயற்சியில் இஸ்ரேல் தற்போது இறங்கி உள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெய்ரூட் நகரில் மூத்த ஹிஸ்புல்லா குழுவின் தலைவர்கள் கூட்டம் நடத்தும் கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் அழித்தது. ஹிஸ்புல்லா குழுவுக்கு தொடர்புடைய பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. 

மேலும் படிக்க | இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News