பாஜக தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை; 2 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மாவட்ட மருத்துவமனைக்கு அருகே சாலையை முற்றுகையிட்டனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2019, 05:15 PM IST
பாஜக தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை; 2 பேரை மடக்கி பிடித்த பொதுமக்கள் title=

பஸ்தி: உத்தரப்பிரதேசத்தின் (Uttar Pradesh) பஸ்தி (Basti) மாவட்டத்தில், அதுவும் பட்டப்பகலில் எபிஎன் பிஜி கல்லூரியின் (Ambika Pratap Narain PG College) முன்னாள் மாணவர் சங்கத் தலைவரும், பாஜக (BJP) தலைவருமான ஆதித்ய நாராயண் திவாரி "கபீர்" சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மால்வியா சாலையில் உள்ள அகர்வால் பவன் வளாகத்துடன் தொடர்புடையது. துப்பாக்கியால் சுட்டதில் பலத்த காயமடைந்த கபீர், மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரின் நிலைமை மோசமாக இருப்பதைக் கண்ட மருத்துவர், முதலுதவிக்குப் பிறகு, அவரை லக்னோ (Lucknow) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் லக்னோவுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாஜக தலைவர் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்களும், பொது மக்களும் மாவட்ட மருத்துவமனைக்கு அருகே சாலையை முற்றுகையிட்டனர். அவர்கள் கோட்வாலிக்கு வெளியே நின்றிருந்த போலீஸ் காரின் மீது கற்களை வீசினர். இந்த சம்பவம் நடைபெற முக்கிக் காரணம் போலிசாரின் மெத்தனமே என  பொதுமக்கள் காவல்துறையின் மீது குற்றம் சாட்டினர்.

நமக்கு கிடைத்த தகவலின் படி, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் கோட்வாலி பகுதியில் அமைந்துள்ள அகர்வால் பவன் வளாகத்தில் நுழைந்ததாகவும், அங்கிருந்த கபீரின் காலில் தொட்டு வணங்கி பிறகு, அவரின் மார்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இதனால் சாலையில் விழுந்த கபீரை, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் காப்பாற்றி அவசர அவசரமாக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

துப்பாக்கியால் சுட்ட இளைஞர்களில் ஒருவரை அங்கிருந்த கும்பல் சம்பவ இடத்திலேயே பிடித்தது. மற்றொறு குற்றவாளியை தப்பி ஓட முயன்று, அருகில் இருந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவரையும் பொதுமக்கள் பிடித்தனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

Trending News