கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா?

Corona Update: கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது  சுகாதார அமைச்சகம்... இதையடுத்து கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 17, 2022, 09:38 AM IST
  • கோவிட் தடுப்பூசி இனி தேவையில்லை
  • தேவைப்பட்டால் பார்த்துக் கொள்வோம்
  • தடுப்பூசி வாங்க வைத்திருந்த பணத்தை திருப்பிய சுகாதரத் துறை
கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா? title=

புதுடெல்லி: இந்திய சுகாதார அமைச்சகம் இனி கொரோனா தடுப்பூசியை வாங்காது. கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நிதியையும் சுகாதார அமைச்சகம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டது, அப்படி என்றால், உலகில் கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா என்று கேள்வி எழுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன?

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் இந்த மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இனி கோவிட்-19 தடுப்பூசிகளை வாங்க மாட்டோம் என்று முடிவு எடுத்த சுகாதார அமைச்சகம், தடுப்பூசி போடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், தங்களிடம் இருப்பில் இருந்த தொகையில் ரூ.4,237 கோடியை நிதி அமைச்சகத்திடம் திருப்பி அனுப்பியுள்ளது.

தற்போது மத்திய அரசிடம் 1.8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இருப்பில் உள்ள மருந்துகள், அடுத்த ஆறு மாதங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானது ஆகும்.

கோவிட்-19 பாதிப்புகள் குறைந்து வருவதால், தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்போது தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த ஆண்டு அனைத்து பெரியவர்களுக்கும் இலவச பூஸ்டர் டோஸ்களை வழங்குவதற்காக அம்ரித் மஹோத்சவ் என்ற 75 நாள் கோவிட் தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கியது.

ஆனால் தடுப்பூசிக்கு அதிக தேவையும், வரவேற்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, தடுப்பூசி கையிருப்பு மத்திய, மாநில அரசுகளிடம் அதிக அளவில் உள்ளது. இவற்றில் பல, சில மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும். இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, இப்போது தடுப்பூசி வாங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

6 மாதங்களுக்குப் பிறகு, நிலைமைக்கு ஏற்ப கோவிட் தடுப்பூசி வாங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.

 

இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?

மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கியது. இதன் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உதவ, அவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதிக்குள், நாட்டில் 219.32 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 

நாட்டின் வயது வந்தோரில் 98 சதவீதம் பேர் கோவிட்-19 தடுப்பூசியின் குறைந்தபட்சம் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என்றும், 92 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.  இது தவிர, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 83.7 சதவீத இளம் பருவத்தினரும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 72 சதவீத இளம் பருவத்தினர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில், 87.3 சதவீதம் பேர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 68.1 சதவீதம் பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில், தகுதியானவர்களில் 27 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News