அடிக்கல் நாட்டியதோடு நின்றது பணி… பாக்.கில் இந்துக் கோயில் சாத்தியமா இனி?

கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவிலைக் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

Last Updated : Jul 18, 2020, 09:03 PM IST
  • பாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு நாடு.
  • இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் மக்கள் தொகையில், முஸ்லீம் அல்லாதவர்களின் மக்கள் தொகை 23 சதவீதம் ஆக இருந்தது.
  • இப்போது சிறுபான்மையினரின் மக்கள் தொகை 5 சதவிகிதமாக உள்ளது.
அடிக்கல் நாட்டியதோடு நின்றது பணி… பாக்.கில் இந்துக் கோயில் சாத்தியமா இனி? title=

பாகிஸ்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் ஒரு நாடு. அங்கே சிறுபான்மையினருக்கு ஒருபோதும் பாதுகாப்பு இருந்ததில்லை.

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சித்திரவதை செய்யப்படுவது அங்கே தினம் தினம் வழக்கமாக நடக்கும் ஒரு சம்பவம். இவர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என ஆட்சியாளர்கள் அதிகாரிகள், ஒரு போதும் நினைத்ததில்லை. அதற்கு பெரிதும் முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் அங்கு இல்லை.

கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முதல் இந்து கோவிலைக் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு கிருஷ்ணர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இது பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1947 ஆம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் கட்டப்பட இருந்த முதல் இந்து கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!

அரசின் நிதி உதவியுடன் மக்களின் நன்கொடையும் சேர்த்து இந்த கிருஷ்ணர் கோவில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் நெருக்குதலை அடுத்து, கோவில் கட்டும் பணி நிறுத்தப்பட்டது.

இந்து கோவில் கட்டப்பட்டால், இந்துக்கள் ஓவ்வொருவரையும் கொலை செய்வோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு ஒரு சிறிய குழந்தை எச்சரிக்கும் வீடியோ கூட சமீபத்தில் வைரலாகியது.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர், முஸ்லிமல்லாதவர்கள் ஆக இருந்தனர். ஆனால் இன்று அவர்கள் மக்கள் தொகை 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதிலிருந்தே பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை என்ன என்பதை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

ALSO READ  | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!

தற்போது பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் அமைப்பு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் நிறுத்தப்பட்ட கோவில் கட்டும் பணியை  மீண்டு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான நவீத் வால்டர் என்பவர், கோவில் கட்டுவதை எதிர்த்து, பாகிஸ்தான் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் நடத்தப்படும் பிரச்சாரத்தை மிகவும் கண்டித்துள்ளார்.

இந்து கோவில் கட்டப்பட்டால், அது சகிப்பு தன்மைக்கான ஒரு அடையாளமாக இருக்கும் என்றும், ஆனால் இப்போது எழுந்துள்ள நிலைமை பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றனர் என்பதற்கான ஒரு சாட்சியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மண்ணில் கோவில் கட்டுவதை ஒரு போது அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டின் பல முஸ்லிம் அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான நவீத் வால்டர், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் மத வழிபாடுகள் நடத்த பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் உட்பட மத சிறுபான்மையினருக்கு  உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

ஹிந்து கோவில் கட்டுமானப் பணி தொடங்கப்படாவிட்டால், பாகிஸ்தான் மண், மத அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே சொந்தம் என்பதை உறுதிப்படுத்தி விடும் என்று அவர் கூறினார். பாகிஸ்தானில் கோவில், தேவாலயம் மற்றும் பிற மத சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை அமைப்பதற்கு, பாகிஸ்தான் அடிப்படைவாதிகளிடம் ஏன் அனுமதி பெறவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரால், தங்கள் மதக் கடவுளை சுதந்திரமாக வணங்க முடியாது. விரும்பியப்டி பூஜிக்க முடியாது. அவர்கள் வீட்டு பெண்கள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு, கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறது. சிறுபான்மையினர் இறந்தால், அவர்களுக்கான மயானம், கல்லறை முதற்கொண்டு எல்லாவற்றிலும் பிரச்சினை. அவர்கள் விரும்பிய இடத்தில் வசிக்க கூட முடியாது. சமீபத்திய நிகழ்வில் பாகிஸ்தானில், ஜோசப் என்பவர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இடத்தில் குடி புகுந்த போது, அங்கிருந்து வெளியேறும்படி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அவர் மறுத்த போது அவரும் அவரது மாமியாரும் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் மிகவும் சகஜமான விஷயம்.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஹிந்து கோவில் எழுப்பப்படுமா? அடிக்கல் நாட்டிய தோடு நின்ற கிருஷணர் கோவில் பணி தொடருமா? அங்கே கோவில் எழுப்பப்பட்டு, கிருஷ்ணர் அங்குள்ள இந்துக்களுக்கு தரிசனம் தருவாரா? இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Trending News