Pudhupettai: கோபம்-காதல்-வன்மம்..அனைத்தையும் அழகாக காட்டிய 17 வருட பொக்கிஷம் 'புதுப்பேட்டை' படம்..!

17 Years of Pudhupettai: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படம் 17 வருடத்தை கடந்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : May 26, 2023, 08:52 AM IST
  • புதுப்பேட்டை திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியானது.
  • படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகியுள்ளது.
  • புதுப்பேட்டை 2 குறித்த எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.
Pudhupettai: கோபம்-காதல்-வன்மம்..அனைத்தையும் அழகாக காட்டிய 17 வருட பொக்கிஷம் 'புதுப்பேட்டை' படம்..! title=

செல்வராகவனின் திரைப்படம் என்றாலே அதில் வண்ணங்களும் வெளிச்சங்களும் நிறைந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்ணங்கள் மீதும் ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் வெவ்வேறாக இருக்கும். கலை தன்மையும்   தனக்கு சரி எனப்படும் கமர்சியல் தன்மையும்   சேர்த்து ஆஃப் பீட்  வகையில் தன் படைப்புகளை உருவாக்கி வருகிறார்,‌செல்வா.  

செல்வா என்றாலே தனித்துவம்தான்!

செல்வவாவின் படங்கள் என்றாலே அதில் தனித்துவமான பல அம்சங்கள் அமையப்பெற்றிருக்கும். இவர் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் கூட உளவியல் சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்களில் சிலர் கூறுகின்றனர். இவரது படங்கள் ஒரு தனி  fantasy-யான உலகமாய்  இருக்கும். அவர் உலகத்தில் கோபம்,காமம்,காதல், அன்பு போன்ற வண்ணங்களை தீட்டியிருப்பார். படம் பார்க்கும் ரசிகர்களை அவர்கள் மனம் முழுக்க ஆக்ரமித்து அவரது உலகிற்கே அழைத்து செல்பவர், செல்வா.

புதுப்பேட்டை ஆங்கில படத்தின தழுவலா? 

ஆங்கிலத்தில் 1983ஆம் ஆண்டு ஸ்கார்ஃபேஸ் (SCARFACE) என்ற படம் வெளியானது. இந்த படத்தில் மியாமி நகரில் சாதரண ஆளாக நுழைந்து பின்னர் தாதாவாக மாறும் ஒரு ஹீரோ குறித்த கதைதான் இந்த படம். இதனாலேயே ஸ்கார்ஃபேஸ் படத்தை தழுவித்தான் புதுப்பேட்டை படம் எடுக்கப்பட்டது என்ற பேச்சு கூட அடிப்பட்டது. ஒவ்வொரு முறை புதுப்பேட்டை திரைப்படத்தை பற்றி விவாதிக்கும் போதும் ஆங்கிலத்தில் வெளிவந்த SCARFACE  திரைப்படத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | Adah Sharma: தி கேரளா ஸ்டோரி நாயகி அடா சர்மாவின் மொபைல் எண் இணையத்தில் லீக்..!

உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டதா? 

ஆங்கில படத்தின் தழுவல்தான் புதுப்பேட்டை என்ற தகவல் ஒருபுறமிருக்க அது குறித்த இன்னொரு சுவாரஸ்ய தகவலும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. மதுரையில் உள்ள அரசியல் களத்தை சென்னையில் பிரதிபலிக்கும் விதமாக புதுப்பேட்டை திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பு மக்கள் கூறுகின்றனர்.

எந்த வகைமைக்குள்ளும் அடங்காத புதுப்பேட்டை..!

தாதாக்கள் மற்றும் ரெளடிகளைக் கொடூரமான வில்லன்களாகவும், வில்லத்தனம் மிக்க அரக்கர்களாகவும் கடைசியில் தவறுகளை உணர்ந்து திருந்துகிறவர்களாகவும் தமிழ் சினிமாவில் பலர் சித்தரித்துள்ளனர். ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் 2006 மே 26 அன்று வெளியான 'புதுப்பேட்டை' திரைப்படத்தை இவற்றில் எந்த வகைமைக்குள்ளும் அடக்கிவிட முடியாது.
நன்மை, தீமை என்ற பொதுவான மதிப்பீடுகளுக்கு அஞ்சாமல் தாதாக்கள் உருவாகும் விதத்தையும், அவர்களின் செயல்பாடுகளையும், அவற்றின் விளைவுகளையும், தாதாக்களை இயக்கும் அரசியலையும், அரசியலின் தாதாக்களின் தாக்கத்தையும் எந்த ஒரு மனச்சாய்வும் இன்றி யதார்த்தத்துக்கு நிகராக அதேநேரம் ஆவணத் தன்மை அடைந்துவிடாத அபாரமான கலை நேர்த்தியுடன் படைத்திருப்பார் செல்வராகவன்.

நாயகன்-பாட்ஷா போன்ற படங்களுக்கு வசனம்  எழுதிய பாலகுமாரன், புதுப்பேட்டை படத்திற்கும் வசனம் எழுத்தியுள்ளார்.
செல்வராகவன் தற்போது   புதுப்பேட்டை 2 எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  

கொக்கி குமார் கதாப்பாத்திர வடிவமைப்பு:

புதுப்பேட்டை திரைப்படம் வட சென்னையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கதைக்களம் அமைந்திருந்தது. இதில் வரும் கொக்கி குமார் கதாபாத்திரம் முதலில் பயந்தசுபாவம் ஒருவனாகவே காட்டப்படுகிறான். ஆனால் இறுதியில் கொக்கி குமாரை பார்த்து நாமே பயப்படும் அளவிற்கு கொக்கி குமாரின் ரவுடித்தனமும்  சர்வாதிகார செயல்பாடுகள்  வளர்ந்திருக்கும். எதிரிகளை அழித்து முன்னேறி வருகையில் துரோகங்களால் வீழ்த்தப்படுகிறான். எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நேரத்தில் சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களின் பாதுகாப்புக்காக விடுவிக்கப்பட்டு உயர் பதவியையும் பெறுகிறான்.

அதிலும் கொக்கி குமார் செல்வி, என்னும் கதாபாத்திரத்திற்கு அவளுடைய விருப்பமின்றி அனைவரது முன்னாலும் தாலி கட்டும் காட்சி இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் அந்த காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு காட்சியாக இன்று வரை இருக்கிறது.இத்தகைய கொடிய கதாபாத்திரத்தையும் இயக்குனர் செல்வராகவன் நம்மை கண்ணிமைக்காமல் ரசிக்க வைத்து நமக்குள் இருக்கும் சைக்கோ தன்மையை வெளியே வர வைத்திருப்பார். இத்தனை ஆண்டுகளுக்கு கடந்தும், கொக்கி குமார் கதாப்பாத்திரத்தில் தனுஷை தவிர வேறு எந்த நடிகரும் பொருந்தக்கூடியவர்களாக தெரியவில்லை.

நா.முத்துக்குமார்-யுவன் காம்போ:

நா முத்துக்குமார்- யுவன் சங்கர் ராஜா காம்போவில் பாடல்களும் அதன் இசையும் வாடிப்பாேன மனதிற்கு மருந்து போடுவது போல அமைந்தன. அதிலும் “ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..” எனும் பாடல், இன்றும் பலருக்கு மோட்டிவேஷனல் ரிங்டோனாக அமைந்துள்ளது. “எங்க ஏரியா உள்ள வராத..” பாடலுக்கு இன்றும் இளசுகள் பலர் தாளம் தட்டுவர். பாடல்கள் மட்டுமன்றி, காட்சிக்கு ஏற்ற இசையமைப்பும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும். 

மேலும் படிக்க | Adipurush: அதிர வைக்கும் ஆதிபுருஷ் அப்டேட்..அடுத்த பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News