விபத்து விழுங்கிய 'வியப்பழகி'! செளந்தர்யா Birthday special!

நடிகை செளந்தர்யாவின் பிறந்த தினம் இன்று. அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய சிறு பார்வை.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 18, 2022, 05:38 PM IST
  • தென்னிந்திய சினிமாவைக் கலக்கிய செளந்தர்யா பிறந்த தினம் இன்று
  • 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் நடிகை செளந்தர்யா
  • ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தவர் செளந்தர்யா
விபத்து விழுங்கிய 'வியப்பழகி'!  செளந்தர்யா Birthday special! title=

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் சிலரது பெயர்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுவதுண்டு. அத்தகைய பெயர்களுள் ஒன்று நடிகை செளந்தர்யா. அவருக்கு இன்று பிறந்த நாள்.

சினிமாவில் அறிமுகம்

செளம்யா எனும் இயற்பெயர் கொண்ட செளந்தர்யா, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். தான் படித்துவந்த எம்.பி.பி.எஸ் படிப்பை முதல் ஆண்டோடு நிறுத்திய செளந்தர்யா , சினிமாவுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டது. 1992ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் நடித்த பொன்னுமணி படம்தான் செளந்தர்யா அறிமுகமான முதல் தமிழ்ப்படம். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தது. சாந்தமான முகமும், குழந்தைத் தனமான சிரிப்பும் ஹோம்லியான தோற்றமும் செளந்தர்யாவின் முக்கிய அடையாளமாகப் பார்க்கப்பட்டது.

இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அம்மோரு எனும் பக்திப் படம் அம்மன் எனும் பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. பட்டி தொட்டியெங்கும் கலக்கிய அப்படம் செளந்தர்யாவின் திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றே சொல்லலாம். அதன் பின்னர் டாப் நடிகர்களான கமலுடன் காதலா காதலா, ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்துடன் தவசி, சொக்கத்தக்கம் என முன்னணி நடிகையாக வலம்வந்தார் செளந்தர்யா.

தெலுங்கில் டாப்

இது கோலிவுட்டில் அவரது கதையென்றால் தெலுங்கு சினிமாவில் அவரது கதையே வேறு. தெலுங்கின் உச்ச நடிகையாக வலம்வந்த செளந்தர்யா, அவரது காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கின் டாப் நடிகர்கள் பலரின் படங்களுக்கான முதல் தேர்வாக இருந்த செளந்தர்யாவை நவீன தெலுங்கு சினிமாவின் சாவித்ரி என பெயர் சூட்டி மகிழ்ந்தது டோலிவுட் சினிமா. சுமார் பத்தாண்டு காலத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில்  நடித்து சாதனை படைத்துள்ள செளந்தர்யா இதில் முக்கால் வாசிப் படங்களை தெலுங்கில்தான் நடித்துள்ளார்.

அரசியல் பக்கம்

தென்னிந்திய சினிமாவையே கலக்கிக்கொண்டிருந்த செளந்தர்யா அரசியல் பக்கமும் காலடி எடுத்துவைத்தார். அந்த வகையில் 2004ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், அந்த ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சிக்காக பரப்புரையில் ஈடுபட்டார். அப்படியான ஒரு பரப்புரைக்காக சென்றபோதுதான் அந்தக் கோர விபத்து நடந்தது. ஆம், 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி, பெங்களூருவிலிருந்து கரிம்நகருக்கு பரப்புரைக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார் செளந்தர்யா. அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோர விபத்து

செளந்தர்யாவின் மரணச் செய்தி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. சினிமா உலகம் அதிர்ச்சியில் உறைந்தது. செளந்தர்யா இறந்த அதிர்ச்சி செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் இன்னும் நீங்காத வடுவாகவே இருந்துவருகிறது. நாட்டில் நடந்த கோரமான ஹெலிஹாப்டர் விபத்துகளுள் ஒன்றாக இன்றளவும் மக்கள் மத்தியில் தேங்கி நிற்கிறது செளந்தர்யாவின் மரணம். விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவுக்கே தமிழில் அவர் படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிக நெஞ்சங்கள் பலர் மத்தியில் இன்றும் வாழ்ந்து வருகிறார் செளந்தர்யா.

மேலும் படிக்க | நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News