நித்யானந்தாபற்றி புட்டு புட்டு வைக்கும் கனடா பெண் சீடர் சாரா லாண்டர்...

நித்யானந்தா மீது குற்றம்சாட்டும் கனடாவை சேர்ந்த முன்னாள் பெண் சீடர் சாரா லாண்டர்..!

Last Updated : Sep 22, 2019, 03:58 PM IST
நித்யானந்தாபற்றி புட்டு புட்டு வைக்கும் கனடா பெண் சீடர் சாரா லாண்டர்... title=

நித்யானந்தா மீது குற்றம்சாட்டும் கனடாவை சேர்ந்த முன்னாள் பெண் சீடர் சாரா லாண்டர்..!

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி (Sarah Stephanie Landry) என்ற இளம் பெண், தான் அங்கு தங்கியிருந்த போது நடந்த சம்பவங்கள் பற்றியும் நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவர் மீது புகார் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்து துறவறம் மேற்கொண்டு ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார். பின்னர், நித்யானந்தா பற்றிய உண்மையை நேரில் பார்த்து அவர் போலி என அறிந்து மீண்டும் தன் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் சாரா.

இது குறித்து சாரா ஸ்டீபனி லாண்ட்ரி கூறுகையில்; ``நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகுதான் தெரிந்துகொண்டேன்.

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுல ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் கணக்குகளை ஆரம்பித்து அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகத்தொடங்கினர்.

ஒரு நாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத்தொடங்கிவிட்டனர். அப்போது அவர்கள்தான் என்னிடம் ``நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய்" என்று கூறினர், . ``ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம், கழிவறைக்குச் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தனர். அவர்கள் கூறியதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மூத்த அதிகாரிகளான நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் திருவனந்தபுரம் ஆசிரமத்தை நடத்துபவர் ஆகியவர்களிடம் நான் பேசினேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும் நித்யானந்தாவால் மூளை சலவை செய்யப்பட்டிருந்தேன்.

அவரின் உண்மையான முகம் தெரிந்த அடுத்த சில நாள்களில் நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அந்த குழந்தைகளைக் காப்பாற்றவேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் பேசிய 30 நிமிட வீடியோவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை நித்யானந்தா மீதும் அவரது ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீதும் சுமத்தியுள்ளார் சாரா.

`இரண்டு வருடங்கள் கழித்து சாரா குற்றம்சாட்டுவது என்பது மதத்தின் மீதான தாக்குதல். மேலும், நித்தியானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்திலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்' என நித்தியானந்தாவின் இணையதளத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News