பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர்; சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி ஜனவரி 22ம் தேதி வரை நடைபெறும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2022, 04:39 PM IST
  • போட்டிகளும் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளப் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
  • அனைத்து போட்டிகளின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும்.
  • ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்களெல்லாம் இந்த தொடரில் விளையாடியவர்கள் தான்.
பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர்; சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு! title=

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி ஜனவரி 22ம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் 17ம் தேதி சென்னையில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் தொடருக்கான கோப்பையையும் ஜெர்சியையும் அறிமுகம் செய்துவைத்தார். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் ஆதரவாக இருக்கும். தலைமை ஸ்பான்ஸராக சாய் ராம் கல்வி நிறுவனம் மற்றும் துணை ஸ்பான்ஸர்களாக இந்தியா சிமெண்ட்ஸ், ஃபிரேயர் இன்டர்நேஷனல் நிறுவனங்கள் செயல்படும்.       

86 அணிகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 2022-23 தொடரின் போட்டிகள் சென்னை, திருச்சி, விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் நடைபெறும்.

"முதல் முறையாக 2012ல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் 32 அணிகள் பங்குபெறும் தொடராக சென்னையில் நடைபெற்றது. அதில் தொடங்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் திறமைகளை கண்டறியும் தளமாக மாறியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கொரோனா காரணமாக  நடைபெறாத தொடர் மீண்டும் நடைபெறுவது எங்களுக்கு பெருமகிழ்ச்சி. தமிழ்நாடு முழுவதும் கிரிக்கெட்டுக்கான அடித்தளத்தை மேம்படுத்த நாங்கள் வைத்திருக்கும் முக்கிய திட்டங்களுள் ஒன்று தான் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர். ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் ஆகிய தமிழக வீரர்களெல்லாம் இந்த தொடரில் விளையாடியவர்கள் தான். இந்தாண்டும் அதே போல் வருங்காலத்தில்  நடச்சத்திர வீரர்களாய் கலக்கப் போகும் நிறைய பேர் கண்டறியப்படுவார்கள் என்று நம்புகிறேன்" என்று பேசினார் சென்னை சூப்பர் கிங்ஸின் முதன்மை செயல் அதிகாரி, கே.எஸ்.விஸ்வநாதன்.

"தமிழ்நாடு முழுவதும் இருக்கும் இளைஞர்களுக்கு கிடைக்கும் சிறந்த வாய்ப்பு தான் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர். வீரர்கள் பெரிய கனவோடு இருக்க வேண்டும். தொடரில் சிறப்பாக செயல்பட்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெறுவதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். களத்தில் கடும் உழைப்பை போட்டு விளையாடுங்கள். ஆனால் அதே சமயம் எப்போதும் தோனி சொல்வது போல் நேர்மையாக, முகத்தில் சிரிப்புடன் விளையாடுங்கள். நீங்கள் சிறப்பாக விளையாட என் வாழ்த்துக்கள்" என்று பேசினார் ஸ்டீஃபன் ஃபிளெமிங்.

மேலும் படிக்க | யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!

"கிரிக்கெட்டுக்கான வளர்ச்சிக்கு முக்கிய பகுதியாக இருக்க சாய்ராம் நிறுவனத்துக்கு கிடைத்த பெரிய வாய்ப்புதான் இது. இதில் நிறைய திறமையான இளம் வீரர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். சிறப்பான விஷயங்கள் உங்களுக்கு வந்து சேரும்" என்று பேசினார் சாய்ராம் கல்வி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து.

"பலம் வாய்ந்த அடித்தளத்தை கட்டமைப்பதில் எப்போதும் நம்பிக்கையை கொண்டது இந்தியா சிமெண்ட்ஸ். 2008ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அடித்தளத்தை உருவாக்கியது. 2012ல் தொடங்கிய ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கான அடித்தளத்தை உருவாக்கியதும்  இந்தியா சிமெண்ட்ஸ். கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் தளமான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடருக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்" என்று பேசினார் இந்தியா சிமெண்ட்ஸ் மார்க்கெட்டிங் பிரிவின் தலைமை அதிகாரி ஷஷாங்க் சிங்.

மேலும் படிக்க | அர்ஜெண்டினாவை கதிகலங்க வைத்த எம்பாப்பே யார்?

"சென்னையில் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கிரிக்கெட்டை வளர்க்க முயற்சிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த தொடர் பெரிய அளவில் சென்றடையும் என்று நினைக்கிறேன். விடாமுயற்சியும் உறுதியான மனதைரியமும் கொண்டிருந்தால் தமிழ்நாடு பிரீமியர் லீக், ஐ.பி.எல் மற்றும் இந்திய அணியில் கூட திறமையான வீரர்கள் விளையாடலாம்," என்று பேசினார் ஃபிரேயர் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் டி.ஜே ஸ்ரீனிவாசராஜ்.

"சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொடர்களை நடத்துவது மிகவும் கடினமான விஷயம். ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போன்ற தொடர்கள் பிற மாவட்டங்களில் கிரிக்கெட்டை நிச்சயம் வளர்க்கும். தமிழ்நாடு கிரிக்கெட்  அசோசியேஷன் சார்பாக எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பேசினார்  தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கௌரவத் துணைச் செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா.

தொடரின் சிறப்பம்சங்கள்:

தொடர் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி டிசம்பர் 26 முதல் ஜனவரி 10 வரை நாக்-அவுட் முறையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நடைபெறும்.

சென்னையில் இருந்து இரண்டு அணிகள் (முதல், இரண்டாம் இடம் பிடிப்பவர்கள்) மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆறு அணிகள் ஜனவரி 18 முதல் ஜனவரி 22 வரை திருநெல்வேலியில் நடைபெறும் தொடரின் இரண்டாம் பகுதியில் விளையாடுவார்கள். இறுதிப்போட்டி இரவில் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் போட்டிகளும் தொடரின் இரண்டாம் பகுதியும் சென்னை சூப்பர் கிங்ஸ் இணையத்தளப் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

தேவையான பயணச்செலவுகளை சென்னை சூப்பர் கிங்ஸ் கவனித்துக்கொள்ளும்.

எல்லா வீரர்களுக்கும் வண்ண டிஷர்ட்கள் மற்றும் தொப்பிகள் வழங்கப்படும்.

அனைத்து போட்டிகளின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த பேட்ஸ்மேன், தொடர் நாயகன், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன் போன்ற சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.

மேலும் படிக்க | வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா; டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இது போதாது

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News