ஐதராபாத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

-

Last Updated : May 30, 2016, 02:08 PM IST
ஐதராபாத் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது. title=

ஐ.பி.எல். கிரிக்கெட் பைனல்:-

9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஓரிரு ஓவர் நிதானமாக ஆடிய பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர். தவான் 6 ரன்னில் கொடுத்த கேட்ச்சை பந்து வீசிய கெய்ல் தவற விட்டார். வார்னர் வழக்கம் போல் அதிரடி தாக்குதலை தொடுத்தார்.  இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரரில் 63 ரன்கள் எடுத்து வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர். தவான் 25 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 28 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 4 ரன்னில் வெளியேறினாலும் அதன்பின் ஆட வந்த யுவராஜ்சிங் நிலைத்து நிதானமாக ஆடினார். 

நடப்பு தொடரின் 9-வது அரைசதம் வார்னர் 24 பந்துகளில் பூர்த்தி செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் 52 ரன்களை சேகரித்தனர்.

அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் ஆடத்தொடங்கியது. கிறிஸ் கெய்ல் தனது அதிரடி ஆட்டதால் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். மறுமுனையில் விராத் கோலி நிதானமாக ஆடி ஒத்துழைப்பு தந்தார். 25 பந்துகளில் கெய்ல் அரைசதத்தை எட்டினார். பெங்களூர் அணி 9 ஓவர்களில் 100 ரன்களை தாண்டியது. 114 ரன்கள் எடுத்த நிலையில் கெய்ல் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர் உட்பட 76 ரன்கள் எடுத்து கேட்ச் அவுட் ஆனார். இதன் பின்னர் கோலியின் பேட் வேகம் காட்டியது. அரைசதத்தை கடந்த விராத் கோலி 35 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 54 ரன்களில் போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 5 ரன்னில் கேட்ச் ஆக ஐதராபாத் பவுலர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து லோகேஷ் ராகுல் 11 ரன்னிலும், ஷேன் வாட்சன் 11 ரன்னிலும், ஸ்டூவர்ட் பின்னி 9 ரன்னிலும்  சீக்கிரமாகவே வெளியேற பெங்களூரு அணி நெருக்கடி வளையத்தில் சிக்கியது.

கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன் மட்டுமே கிடைத்தது. அடுத்த 3 பந்தில் 15 ரன்கள் தேவையாக இருந்தது. ஆனால் 3 பந்தில் 6 ரன் மட்டுமே கிடைத்து. கடைசி ஓவரில் மொத்தம் 9 ரன்கள் மட்டுமே புவனேஸ்வர்குமார் விட்டு கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கடைசியாக 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்களே பெங்களூரு அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

Trending News