முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்!

Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 30, 2023, 09:30 AM IST
  • ஆக. 31ஆம் தேதி மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோவை வருகிறார் - அண்ணாமலை
  • தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது - அண்ணாமலை
  • முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது - அண்ணாமலை
முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்! title=

Tamilnadu Latest News: கோவை பேரூர் பகுதியில் நடைபெறும் நொய்யல் திருவிழாவின் 5ஆம் நாள் நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டும், காவடி ஆட்டம் ஆடியும் விழாவில் நேற்று (ஆக. 29) உரையாற்றினார். பின்னர் நொய்யல் ஆராத்தி வழிபாட்டில் கலந்து கொண்டார்.  

இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசு முக்கியமான முடிவை அமைச்சரவையில் எடுத்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நேரடியாக 200 ரூபாய் குறிக்கப்படும். இது 33 கோடி குடும்பங்களுக்கும் அமல்படுத்தப்படும். இது இன்று ரக்‌ஷா பந்தன், ஓணம் திருநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

எல்பிஜி கேஸ் விலை குறைப்பு ஏன்?

இது அனைவருக்கும் வரப்பிரசாதமாக அமையும். 200 ரூபாய் நேரடியாக வங்கி கணக்கிற்கு வந்துவிடும். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் யாரெல்லாம் சிலிண்டர் பெற்றுள்ளார்களோ அவர்களுக்கு கடந்த நான்கு ஐந்து மாதங்களாக வழங்கப்பட்டு வந்த 200 ரூபாய், மேலும் ஒரு 200 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட உள்ளது. 37 லட்சம் குடும்பத்தினர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெற்றுள்ளனர். இதனை நாம் அனைவரும் நிச்சயமாக பாராட்டியாக வேண்டும். 

உலகில் ரஷ்யா உக்கரை போருக்கு பிறகு Natural gas, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 சதவிகிதம் எல்லாம் ஏறிய போதிலும் கூட, மத்திய அரசு அதனை பெரிய அளவில் ஏறவிடாமல் பார்த்துக் கொண்டார்கள். இருப்பினும் அது சாமானிய மக்களுக்கு சுமையாக இருந்தது. இதனை மக்களும் பலமுறை தெரிவித்து வந்தனர். மத்திய அரசு இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அவருக்கு நம் பிரதமர் எப்படி கடந்த தீபாவளியன்று பெட்ரோல் டீசல் விலையை குறைத்தார்களோ அதே போல் இந்த ரக்ஷா பந்தன், ஓணம் திருநாளில் கேஸ் விலையை குறைத்துள்ளார்கள். மேலும் வருகின்ற காலங்களில் கேஸ் விலையை மேலும் குறைப்பதற்கு தற்பொழுது உள்ள சப்ளையர்களை தாண்டி வேறு நாட்டில் இருந்து வாங்குவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். 

மேலும் படிக்க | எல்பிஜி விலை தள்ளுபடி... ரூ. 200 இல்லை ரூ. 400 - சென்னையில் இப்போ எவ்வளவு தெரியுமா?

கோவை வரும் பியூஸ் கோயல்

அம்ருத் ரயில் நிலையங்களை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் விரிவாக்க பணிகள் ரூ. 25 ஆயிரம் கோடிக்கும் மேல் தேர்ந்தெடுத்து வேலைகள் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அம்ருத் ரயில் நிலையத்தில் கோவை ரயில் நிலையம் இல்லை என்று பலரும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கான கேள்வியை நாங்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் முன் வைக்கும் பொழுது அந்த அதிகாரிகள்,'கோவையில் இருந்து 34 ரயில்களின் புறப்படுகிறது, 96 ரயில்கள் கோவை வழியாக செல்கிறது, கோவையில் புதிதாக ரயிலை இயக்குவதற்கு இடம் கிடையாது' என தெரிவித்தனர்.

அப்படி இருந்தும் நாம் வந்தே பாரத ரயிலை கோவைக்கு இயக்கியுள்ளோம். எனவே கோவைக்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தை அம்ருத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கோவையை பொருத்தவரை இரண்டு பெரிய ரயில் நிலையங்கள் கிடைக்கும். 24 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்கின்ற முயற்சியே ஒரு கட்சியாக நாங்கள் கையில் எடுத்துள்ளோம். நாளை மறுநாள் (அதாவது நாளை) மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோவை வருகிறார். அவருடன் தொழில் நிறுவனங்கள் கலந்துரையாட உள்ளனர். மேலும் அன்றைய தினம், இந்தியாவின் முதல் நிதி அமைச்சரான கோவையை சேர்ந்த சண்முகம் செட்டியின் திருவுருவ சிலையை திறந்து வைக்க உள்ளார். 

தென் தமிழகத்தில் வேரூன்றும் பாஜக

'என் மண் என மக்கள்' முதல் கட்ட பாதயாத்திரையை பொறுத்தவரை மிகவும் கடுமையாக இருந்தது. குறிப்பாக தென் தமிழகத்தில் 40 டிகிரிக்கும் மேல் அனல் பறக்கக்கூடிய இடங்களில் நடைபயணம் நடைபெற்றது. அதே சமயம் மக்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது. அதில் மக்களும் கலந்து கொண்டது எல்லாம் மறக்க முடியாத தருணமாக அமைந்தது. தென் தமிழகத்தில் பாஜக வேரூன்றி இருக்கிறது. அதே சமயம் தமிழகத்தில் அதிகமான பிரச்சனைகளும் தென் தமிழகத்தில் தான் உள்ளது. குறிப்பாக வேலைவாய்ப்பு, தண்ணீர் பிரச்சனை, விவசாய வளர்ச்சி ஆகியவை எல்லாம் தென் தமிழகத்தில் பெரும் சவாலாக உள்ளது.

மேலும் படிக்க | காவிரி நீர் பிரச்சனை - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

அதனால் தான் தென் தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும்போதும் அங்குள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப மத்திய அமைச்சர்களை அழைத்து வந்தோம். பாதயாத்திரை செல்லும் பொழுது அனைவரும் பிரதமர் நன்றாக செயல்படுகிறார், ஆனால் சிலிண்டர் விலையை மற்றும் குறைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். நானும் அவர்களிடம் பிரதமர் இது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று தெரிவித்தேன். தென்காசியில் செப்டம்பர் 4ஆம் தேதி இரண்டாம் கட்ட பாதயாத்திரை தொடங்கி 19ஆம் தேதி கோவைக்கு வந்து விடுவோம். இங்கேயும் பல்வேறு மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிய வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறோம். 

அரசியலமைப்பை மீறுகிறார்கள்

நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் மத்திய அரசுக்கு ஒரு பவர், மாநில அரசுக்கு ஒரு பவர் என்றுதான் உள்ளது. ஆனால் இங்கு ஒரு மாநில அரசு தன்னிச்சையாக தண்ணீர் வழங்க மாட்டேன் என்று கூறும்போது அது அரசியலமைப்பு சட்டத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. காங்கிரஸ் ஒரு பெரிய கட்சி பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி தான். கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் புதிதானவர்கள் அல்ல. காவிரி நீர் பிரச்சினையைப் பொறுத்தவரை இவர்கள் ஏதோ சிறு பிள்ளைகள் வந்து அரசியலமைப்பு சட்டத்தை மதிக்க மாட்டேன் காவிரி நீர் மேலாண்மையை மதிக்க மாட்டேன் என்று சொல்வது போல் உள்ளது.
 
உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும், என்று கூறிவிட்டால் இப்பொழுது கர்நாடகா என்ன சொல்லும்?. இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே கர்நாடகா அரசு கேள்விக்குறியாக்குகிறது. கர்நாடகாவிற்கும் இரண்டு மூன்று மாநிலங்களில் இருந்து தண்ணீர் உள்ளே வருகிறது. அந்த மாநிலங்களும் கர்நாடகாவிற்கு இது போன்று கூறிவிட்டால் என்ன செய்வார்கள்?. தமிழகத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியினர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை புரிந்து கொண்டு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொல்ல வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அன்று பாஜக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். அப்போது தமிழக பாஜகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் இருந்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று தெரிவித்தோம். 

விஷமப் பிரச்சாரம்

அப்போது மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று காவிரி நீர் மேலாண்மை கூறியது. அதனை பாஜக ஏற்றுக் கொண்டது. வட மாநிலத்தில் இருந்து யாராவது தமிழகத்திற்கு வந்தால் அவர்கள் முதலில் பதிவு செய்ய வேண்டும், 15 லட்சத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளர்கள் இங்க இருப்பதாக மாநில அரசு புள்ளி விபரங்கள் கூறுகிறது. மத்திய அரசை பொருத்தவரை 'ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு' என்பதை கூறுகிறது, இதனால் ஒருவர் எங்கிருந்தாலும் ரேசன் பொருட்களை பெற்று கொள்ள முடியும். இதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள். அதேபோல் கல்வியை பொறுத்தவரை 'வீடு தேடி கல்வி' என்பதை மத்திய அரசு கொரோனா காலத்தில் கொண்டு வந்தது. இதனை மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பொது விழிப்புணர்வு அனைவரிடத்திலும் உள்ளது. 

'பொய் பேசுவது முதல்வருக்கு அழகல்ல'

10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வந்துள்ளது என்று நான் ஒரு புள்ளிவிவரத்தை பாத யாத்திரைக்கு முன்பு கொடுத்து இருந்தேன். ஆனால் தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தால், மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தது என்று முதல்வரும் அறிவிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளாகட்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் ஆகட்டும், அம்ருத் திட்டங்கள் ஆகட்டும் எதை எடுத்துக் கொண்டாலும் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காதது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 

ரூ. 10 லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கான புள்ளி விவரத்தை வெள்ளை அறிக்கையாக இன்னும் 24 மணி நேரத்தில் பாஜக கட்சி வெளியிடும். முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவதில் அதிகமாக பொய் உள்ளது. முதலமைச்சர் எதைப் பேசுவதற்கு முன்பும் ஒரு முறை கிராஸ் செக் செய்ய வேண்டும் அல்லது உடன் இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த பேச்சை தடுக்க வேண்டும். ஒரு அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார். திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. நாங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதிகாரிகளிடமும் கொடுத்து அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும் மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம். 

சீமான் ஏன் பிரதமரை எதிர்கிறார்?

திமுக ஊழல் பட்டியலை பொருத்தவரை ஒரு முறை நேரடியாக வழங்கினோம், அடுத்து கவர்னரிடம் வழங்கிவிட்டு முக்கியமானவற்றை வெளியிட்டோம். அடுத்த முறை சிபிஐ விசாரணை கூட கேட்கலாம். DVAC நாங்கள் அளித்த 6 புகார்களை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு அப்படியே வைத்துள்ளார்கள். PGR யை பற்றி நாங்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கிறோம். இன்று மாநில அரசும் வந்த காண்ட்ராக்ட் வேண்டாம் என்று கூறுகிறார்கள். பாஜக, திமுக கட்சியின் மீது மட்டும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான் அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே, நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம். அதில் குற்றம் குறைகள் சொல்லலாம். ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் எங்களுடைய கேள்வி. 

சீமான் மீது எனக்கு மதிப்புள்ளது. ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்த பிறகு எங்கு போட்டியிட்டால் என்ன?. மோடி வாரணாசியில் போட்டியிட்டு அதனை அடிப்படையில் இருந்து மாற்றி விட்டார். ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் அதுவும் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமர் இங்கே நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். திமுகவில் அதிகமான ஊழல்வாதிகள் இருக்கிறார்களே அவர்களை எதிர்த்து சீமான் போட்டியிடட்டுமே,  பிரதமர் என்ன ஊழல் செய்தார்?. சீமான் திமுகவினரை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமே தவிர நல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற மோடியை எதிர்த்து எதற்கு போட்டியிட வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | முதலமைச்சர் மன சமநிலையை இழந்திருக்கிறார் - ஹெச். ராஜா
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News