பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது..!

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

Last Updated : Jan 9, 2020, 11:14 AM IST
பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு துவங்கியது..!  title=

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பண்டிகை தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இயக்கப்பட உள்ள சிறப்புப் பேருந்துகள் பற்றிய தகவல்களை வெளியிட்டார். 

அமைச்சரின் தகவல்கள் படி, பொங்கலை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து மொத்தம் 29,213 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மட்டும் 4,950 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையைப் போன்றே பொங்கல் பண்டிகையின் போது கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறப்பு பேருந்து நிலைய தகவல்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது., 

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் - செங்குன்றம் வழியாக ஆந்திர மார்கமாக செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகா் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் - கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானடோரியம் (மெப்ஸ்) - திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் - திண்டிவனம் மார்கமாக செஞ்சி மற்றும் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் - வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், சித்தூா் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

இவற்றை தவிர, இதர ஊா்களுக்கு செல்லும் பேருந்துகள் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா், எா்ணாகுளம் மற்றும் பெங்களூரூ) கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு பேருந்துகளுக்காக சென்னையில் மட்டும் 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 முன்பதிவு மையங்களும், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் ஒன்றும், பூவிருந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் திறக்கப்படவுள்ளது. 

இன்று முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும், சிறப்புப் பேருந்துகள் 10-ஆம் தேதி முதல் 15 வரை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் செல்ல அனைத்துச் சுங்கச்சாவடிகளிலும் சிறப்பு பாதை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, அரசுப் பேருந்துகளுக்கு தனி வழி இருப்பதை உறுதி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News