48 வயது ஆணுக்கு 2 இதயம்... அதுவும் ஒரே நேரத்தில் துடிக்கும் அதிசயம் - கோவை மருத்துவர்கள் சாதனை!

Tamil Nadu Latest News: கோவையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கூடுதல் இதயம் பொருத்தப்பட்டு, தற்போது இரண்டு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கின்றன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 13, 2024, 03:21 PM IST
  • அந்த நபருக்கு 48 வயதாகிறது.
  • அவரின் இதயம் 7% செயல்பாடை மட்டும் மேற்கொண்டது.
  • இதை தொடர்ந்து அவருக்கு இதயம் நன்கொடையாக வந்தது.
48 வயது ஆணுக்கு 2 இதயம்... அதுவும் ஒரே நேரத்தில் துடிக்கும் அதிசயம் - கோவை மருத்துவர்கள் சாதனை! title=

Tamil Nadu Latest News: நவீன காலகட்டத்தில் மருத்துவ உலகம் என்பது பல வகையில் முன்னேறியுள்ளது எனலாம். சாமானிய மனிதனும் எளிமையாக மருத்துவம் பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு என்பது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடும்போது சிறப்பான ஒன்றாக திகழ்கிறது. அதிலும் சென்னை மருத்துவ கட்டமைப்பில் முன்னணியில் இருந்து வருகிறது. 

அரசு அளிக்கும் தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 48 அரசு மருத்துவமனைகளுடன் இணைந்த கல்லூரிகள், சுமார் 10 லட்சத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், 12 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் ஆகியவை உள்ளன. நூற்றுக்கணக்கில் தனியார் சிறப்பு மற்றும் பல்சிறப்பு மருத்துவமனைகளும் உள்ளன. இவை மட்டுமின்றி, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படை மருத்துவ கட்டமைப்பும் பலமாக இருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குகின்றன.

கோவையில் அசத்திய மருத்துவர்கள்

இத்தகைய மருத்துவ வசதிகள் நிறைந்திருக்கும் காரணத்தால் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டினர் கூட தமிழ்நாட்டுக்கு வருகை தந்து சிகிச்சை பெற்று செல்வதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், தற்போது கோயம்புத்தூர் மருத்துவர்கள் இணைந்து தற்போது மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சை ஒன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த அறுவை சிகிச்சை குறித்தும், அதன் முழு பின்னணியையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.44,125 கோடி மதிப்பில் 15 முதலீடுகளுக்கு ஒப்புதல்: தங்கம் தென்னரசு

கோவையை சேர்ந்த 48 வயது இதய நோயாளி ஒருவருக்கு, heterotopic என்ற இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்கள், தானம் அளிக்கப்பட்ட இதயத்தை பொருத்தியதுடன் அவரின் சொந்த இதயத்தை நீக்காமல் வைத்திருந்ததே இந்த ஆச்சர்யத்திற்கு முக்கிய காரணமாகும். கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் (KMCH) கார்டியோ-தொராசிக் அறுவை சிகிச்சை துறையின் இயக்குநர், மருத்துவர் பிரசாந்த் வைஜ்யநாத் தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டு இதயங்கள்

இதுகுறித்து மருத்துவர் பிரசாந்த் வைஜ்யநாத் கூறுகையில்,"கடந்த ஓராண்டு காரணமாக இதய பிரச்னை மற்றும் உயர் நுரையீரல் அழுத்தம் காரணமாக அந்த நோயாளியால் இயல்பாக ஒரு வேலையை கூட செய்ய இயலவில்லை. அவருக்கு பல முறை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது, அவருக்கு ஸ்டென்டும் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இதய செயல்பாடு என்பது 7 சதவீதமாகவே இருந்தது. அவரால் சின்ன சின்ன அன்றாட வேலைகளை கூட செய்ய முடியவில்லை. உதாரணத்திற்கு பல் துலக்கினால் கூட அவரின் நுரையீரல் அதிக பாதிப்படைகிறது.

இதனால், அந்த நோயாளி இதய நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அவருக்கு அரசின் உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் இதய நன்கொடையாளர் கிடைத்தார். இதை தொடர்ந்தே அவருக்கு Heterotopic அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. இதன்மூலம், அவரின் இதயம் மற்றும் நன்கொடையாளரின் இதயம் ஆகிய இரண்டு இதயங்களும் இணைந்து உயர் நுரையீரல் அழுத்தத்தை நிர்வகிக்க இயலும் என்பதை உறுதிப்படுத்தினோம்" என்றார். 

ஒரே மாதிரி துடிக்கும் 2 இதயங்கள்

இந்த அறுவை சிகிச்சை மூன்று மணிநேரம் நடைபெற்றிருக்கிறது. அவரது இதயம் அப்படியிருக்க, நன்கொடையாளரின் இதயம் அவரது மார்பு குழியின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டது. மேலும், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் இந்த இரண்டு இதயங்களையும் ஒரே நேரத்தில், ஒரே மாதிரியாக துடிக்கவைக்க வேண்டும். இதையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.

"இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர் இரண்டு இதயங்களின் துடிப்பையும் ஒன்றாக வைப்பதுதான் பெரும் சவாலாக அமந்தது. தற்காலிக இதய துடிப்பு முடுக்கி மூலம் ஒரு வார காலம் இதனை மேற்கொண்டு வந்துள்ளனர். இப்போது இந்த முடுக்கி நீக்கப்பட்டது. இதன்மூலம், இந்த இரண்டு இதயங்களும் தற்போது ஒரே நேரத்தில் துடிக்கிறது. அதாவது இரட்டை இதயம்போன்று..." என்கிறார் மருத்துவர் பிரசாந்த் வைஜ்யநாத். 

மேலும், அறுவை சிகிச்சை முடிந்தாலும் நோயாளியின் மருத்துவ நிலையை தொடர்ந்து கண்காணிக்க அவரை அடுத்த 21 நாளுக்கு மருத்துவமனையில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு, மருத்துவர் பிரசாந்த் வைஜ்யநாத் தலைமையிலான குழு முதல்முறையாக heterotopic அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த நோயாளி நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | சென்னையில் அரசு திறப்பதற்கு முன்பே மேம்பாலத்தை பயன்படுத்திய பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News