அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியை ஒரு தவமாய் நினைத்து பணியாற்றி வந்த டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 10:46 AM IST
  • டாக்டர் சாந்தா விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காகவே செலவு செய்தவர்.
  • நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் டாக்டர் சாந்தவின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
  • உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இவர் இடம்பெற்றிருந்தார்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட் title=

சென்னை: அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரும், மூத்த புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான டாக்டர் வி சாந்தா இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 93.

திங்கட்கிழமை இரவு உடலில் அசௌகரியம் இருப்பதாக அவர் புகார் அளித்ததையடுத்து, டாக்டர் சாந்தா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு (Apollo Hospital) அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரது இரத்த நாளத்தில் இருந்த ஒரு அடைப்பை அகற்ற முயன்றனர். இருப்பினும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.55 மணியளவில் அவர் காலமானார்.

அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, பழைய அடையாறு மருத்துவமனையில் வைக்கப்படும். இன்று மாலை 5 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறும்

மருத்துவ சேவைக்காக அவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண், மகசேசே விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான விருதுகளை அவர் வென்றுள்ளார். அவர் தனக்கு விருதுகள் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காகவே செலவு செய்தவர்.

டாக்டர் சாந்தா சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய் (Cancer) நிறுவனத்தில் ரெசிடெண்ட் மருத்துவ அதிகாரியாக சேர்ந்தார். அதன் பின்னர், புற்றுநோயியல் துறையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

பெண்கள் கல்வி கற்பது அவசியம் என்ற நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பத்தில் 1927 இல் சாந்தா பிறந்தார். அவர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் 1949 இல் எம்.பி.பி.எஸ் முடித்து, மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணத்துவம் பெற்றவர்.

1954 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதல் பெண் மருத்துவ பட்டதாரிகளில் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்ட அடயார் புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தா சேர்ந்தார். மருத்துவத்தில் தனது பி.ஜி-ஐ முடித்ததார். 1960 களில் டொராண்டோ மற்றும் இங்கிலாந்தில் (England) மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையிலும் அவர் பயிற்சி பெற்றார்.

1954 ஆம் ஆண்டில் 12 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட அடையார் கேன்சர் நிறுவனம், இப்போது 423 படுக்கைகள் கொண்டு நவீன வசதிகளுடன் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராய் பொறுப்பேற்ற டாக்டர் ஷாந்தா இங்கு பல நவீன வசதிகளைக் கொண்டு வந்தார். நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சைப் பெற்றனர்.

ALSO READ: கோபம் என்பது அவ்வளவு பெரிய குற்றமா?.. சத்குரு கூறுவது என்ன..!

விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் இவரது தாத்தாவின் சகோதரர். நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி டாக்டர் எஸ்.சந்திரசேகர் டாக்டர் சாந்தவின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு டாக்டர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் மருத்துவ உயர் கல்வி பட்டமும் பெற்ற டாக்டர் சாந்தா அடையாறு மருத்துவமனையில் தனது மருத்துவ பணியை துவங்கினார்.

அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவரது பங்கு அளப்பறியது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி (Narendra Modi), இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

புற்று நோய் சிகிச்சையை சேவையாக செய்து வந்த டாக்டர் சாந்தா எல்லோரது நினைவிலும் இருப்பார். அடையாறு புற்றுநோய் நிறுவனம் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்வதில் புகழ் பெற்றது. சாந்தா மறைவு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி ! என பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியை ஒரு தவமாய் நினைத்து பணியாற்றி வந்த டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாகவும், சிலருக்கு மிக குறைந்த செலவிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதுமை தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர் ஷாந்தாவுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை ஸ்ட்ரோக் ஏற்பட்டது. எனினும் அதிலிருந்து அவர் துணிவுடன் மீண்டு வந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை சுறுசுறுப்பாக இருந்ததாக அவரது சகாக்கள் தெரிவித்தனர்.

ALSO READ: 10 மாத காலத்துக்கு பிறகு தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News