காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு நிலைநிறுத்தும்: எடப்பாடி!

காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.   

Last Updated : Mar 10, 2018, 04:38 PM IST
காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு நிலைநிறுத்தும்: எடப்பாடி! title=

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:

"காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் கடினமான பணி.அது மிகவும் எளிதானது அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மிகவும் பெரிய பணி. அது எப்போது அமைக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க நான் விரும்பவில்லை’’ என்று நிதின்கட்கரி கூறினார்.

இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஆனால், ஏற்கனவே மற்ற நிகழ்சிகளுக்கு பிரதமர் நேரம் ஒதுக்கி உள்ளதால், தற்போது சந்திக்க வாய்ப்பில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.பின்னர் மீண்டும் நேற்று முன்தினம், தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசியத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, தில்லியில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளின் பிரதிநிதிகலும் கலந்து கொண்டனர்.

மேலும், அதிகாரிகள் நிலையிலான இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நான்கு மாநிலங்களின் அதிகாரிகளுடன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அமைக்க வேண்டிய அமைப்பு குறித்த கட்டமைப்பு, அதன் பொறுப்புகள், அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் யு.பி.சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இந்த செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். 

இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அதிகாரிகள் வாய்மொழியாகத்தான் தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர். அந்தந்த மாநிலங்களின் ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக அனுப்புமாறு கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு உபேந்திர பிரசாத் சிங் கூறினார்.

எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பதே. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தவிர்த்து மத்திய அரசுக்கு மாற்று வழியில்லை என டெல்லி கூட்டத்தில் அரசு எடுத்து கூறியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு என காவிரி நடுவர்மன்ற ஆணையில் கூறப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என டெல்லி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் போராடி வருகின்றனர்.

காவிரி நீரை ஆதாரமாக கொண்ட விவசாயிகளின் நலனை பேணி பாதுகாக்க ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

Trending News