INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் 15 நாள் திகார் சிறை நீட்டிப்பு

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் சுமார் இரண்டு வாரம் திகார் சிறை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 3, 2019, 04:22 PM IST
INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு மேலும் 15 நாள் திகார் சிறை நீட்டிப்பு title=

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் சுமார் ஒரு மாதம் காலம் சிறைவாசம் முடிந்து, இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கும் மீண்டும் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் குமார் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள் சிபிஐ காவல் முடிந்து மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுத்து ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அன்று முதல் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வரை விசாரணை நடைபெற்றது. அந்த மனுமீதான இறுதி தீர்ப்பில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க முடியாது என கடந்த 30 ஆம் தேதி நீதிமன்றம் தெரிவித்தது.

இந்தநிலையில், இன்று மீண்டும் ப.சிதம்பரத்தின் தரப்பில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

இன்றுடன் சிறை காவல் முடிந்து மீண்டும் ப.சிதம்பரத்தை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது நீதிபதி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Trending News