'மல குழி மரணங்களை தடுக்க ஆர்வம் காட்டவில்லை...' தமிழ்நாடு அரசு மீது கடும் தாக்கு

மல குழி மரணங்களை தடுக்க மனித கழிவுகளை அகற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆர்வம் காட்டுவது இல்லை என தூய்மை பணியாளர்கள் தேசிய ஆணைய தலைவர் வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 28, 2024, 08:52 AM IST
  • கடந்த 20 நாட்களில் 3 பேர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர் - வெங்கடேசன்
  • ஒப்பந்த பணியாளர் என்ற திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் - வெங்கடேசன்
  • மாநில தூய்மை பணியாளர் ஆணையத்தை தொடங்க வேண்டும் - வெங்கடேசன்
'மல குழி மரணங்களை தடுக்க ஆர்வம் காட்டவில்லை...' தமிழ்நாடு அரசு மீது கடும் தாக்கு title=

Septic Tank Toxic Gas Attack Deaths: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள நடேசன் தெருவில் அரவிந்த் அக்ஷயம் அப்பார்ட்மெண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கழிவுநீர் தொட்டியில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (48) மற்றும் ரமேஷ் (49) இருவரும் பிளம்பிங் வேலை செய்தனர். 

இப்பணியின் போது, சுரேஷ் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். ரமேஷ், திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தேசிய சபாய் கரம்சாரி ஆணையத்தின் தலைவர் (தூய்மை பணியாளர்களின் தேசிய ஆணையம்) வெங்கடேசன், சம்பவம் நடந்த இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அய்மான் ஜமால் மற்றும் ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோருடன் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட சுரேஷ் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷிடமும் விவரங்களை கேட்டறிந்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேசன், "தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பில், இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு பொது நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்தியாவில், விஷவாயு தாக்கி இறப்பவர்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

மேலும் படிக்க | திமுகவில் இருந்தவர் திருமாவளவன், விசிக கூட்டணி உறுதி - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு அரசின் அலட்சியம்

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 227 பேர் தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். கடந்த 20 நாட்களில், காரைக்குடியில் ஒருவர், ராஜபாளையத்தில் இருவர் என மூவர் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். தமிழகத்திற்கு இது பெருமை அல்ல. தொழிலாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால், இது போன்ற துயர சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கனவே உள்ள 'தூய்மை காவலர்கள்' வாயிலாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு மாவட்டங்களில் கூட கழிவு நீரை அகற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தமிழகத்தில் இருந்து அவ்வாறான கோரிக்கைகள் வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அந்த விஷயத்தில் தமிழகம் மிக அலட்சியமாக செயல்படுகிறது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளதால், அதை உயர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அரசாணையை நீக்கியே ஆக வேண்டும்

தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், நிரந்தர தூய்மை பணியாளர் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டால், அந்த வேலை காலியாக இருக்கும். இதற்கு முன், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக அவை நிரப்பப்பட்டு வந்தது. தற்போது, தமிழக அரசு அவற்றை ஒப்பந்த பணியாக மாற்றி, நிரந்தர தூய்மை பணியை முற்றிலுமாக நீக்க அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு அந்த பணி கிடைக்காத நிலை உருவாகிறது. ஒப்பந்த ஊழியர்கள் ஊதியம் குறைவாக உள்ளதால் இது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், நிரந்தர தூய்மை பணியாளருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை கிடைப்பதால் அவர்கள் குடும்பச் சூழல் மாறி விடும். எனவே தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த பணியாளராக பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இருக்காது. எனவே, தமிழ்நாடு அரசு அந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். 

அதேபோல், ஒப்பந்த பணியாளர் என்ற திட்டத்தை தமிழக அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தால் மட்டுமே இறப்பு எண்ணிக்கை குறையும். தமிழகத்தில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் 227 பேரில், 200 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். எனவே ஒப்பந்த ஊழியர் என்பதை ஒழித்து நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

டைரக்ட் பேமென்ட் சிஸ்டம்

கர்நாடகா, ஆந்திராவில் 'டைரக்ட் பேமென்ட் சிஸ்டம்' எனும் திட்டம் உள்ளது. அங்கு நிரந்தரமான வேலை, ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என்பது கிடையாது. மாநகராட்சி அல்லது நகராட்சி அவர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்குகிறது. அங்கு தூய்மை பணியாளர்கள் ரூ.18 ஆயிரம் முதல் ரூ. 22 ஆயிரம் வரை பெறுகின்றனர். இதனால் அங்கு இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழக அரசு அந்த திட்டத்தை ஆய்வு செய்து நடைமுறைபடுத்தினால் தமிழகத்தில் இறப்பு விகிதம் குறையும். 

தமிழகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 'கடன்' வழங்கும் திட்டம் பெயரளவில் மட்டுமே அது செயல்படுகிறது. தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் உள்ளது. அதேபோல் மாநில தூய்மை பணியாளர் ஆணையம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | துணைவேந்தர் நியமனம் ஆளுநர் தாமதம் - ப.சிதம்பரம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News