ஜஸ்ட் லைக் தட் அறிக்கை.. லெட்டர் பேட் கட்சியாக செயல்பட வேண்டாம்.. தாவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ்

Tamilaga Vettri Kazhagam Chif Vijay: அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் "ஜஸ்ட் லைக் தட்" என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 12, 2024, 04:22 PM IST
  • இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல -விஜய்
  • 2021 செப்டம்பர் 8 அன்று இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்திட தீர்மானம் -தமிழக அரசு.
  • மாநிலங்களவையில் பாமக-அதிமுக ஆதரவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றம்.
ஜஸ்ட் லைக் தட் அறிக்கை.. லெட்டர் பேட் கட்சியாக செயல்பட வேண்டாம்.. தாவெக தலைவர் விஜய்க்கு அட்வைஸ் title=

Citizenship Amendment Act In India: கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த சட்டம் தொடர்பான அறிவிப்பு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் விதிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பாஜக அல்லாத அனைத்து மாநில அரசு மற்றும் பல அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அறிக்கை

அந்த வரிசையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

"ஜஸ்ட் லைக் தட்"  அறிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விஜய் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அரசியல் வல்லுனர்கள் உட்பட பலர் விஜயின் அறிக்கையை விமர்சித்து வருகின்றனர். 

குறிப்பாக "தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" மற்றும் "குடியுரிமை திருத்தச் சட்டம் மோடி அரசு கொண்டு வந்தது. அதைக் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல், கவனமாக விஜய் தவிர்த்திருப்பது" கடும் விமர்சனதுக்கு உள்ளாகி உள்ளது. 

ஏற்கனவே தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என திமுக அரசு உறுதியாக கூறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி, இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 ரத்து செய்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதுக்கூட தெரியாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருப்பது, வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், அரசியல் கட்சி தொடங்கி விட்டதால், ஏதோ சொல்ல வேண்டுமே என்ற காரணத்தால் "ஜஸ்ட் லைக் தட்" என்ற அடிப்படையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெறும் லெட்டர் பேட் கட்சியாக செயல்படாமல், ஆக்கபூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என மாற்று அரசியலை நோக்கி காத்திருக்கும் அனைவரின் கேள்வியாக உள்ளது.

 

 

 

மேலும் படிக்க - குடியுரிமை திருத்தச் சட்டம்! மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்களுக்காக குரல் குடுத்துள்ள விஜய்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக - பாமக

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்கட்சி தலைவர்கள் மோடி அரசை கடுமையாக சாடி வருகின்றனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு 311 உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், இந்த சட்டம் நிறைவேறாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் பாமக மற்றும் அதிமுக எம்பிக்களின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமானது.

குடியுரிமை திருத்தச் சட்டம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது?

1955 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய ஆறு மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. 

நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? இஸ்லாம் மக்கள் கேள்வி

மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக இந்த சட்டத்துக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு மட்டும் இந்த அநீதி? நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையா? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. பாஜக அல்லாத அனைத்து மாநில அரசும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. பல இடங்களில் வன்முறையும் அரங்கேறியது. பலர் பலியானார்கள். இதன் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்துவதை மோடி அரசு ஒத்தி வைத்தது.

மேலும் படிக்க - Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? இதற்கு ஏன் இந்த எதிர்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News