”யாரையும் காப்பாற்ற முயலவில்லை” - கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல்

Kallakurichi Student Death : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதுகுறித்த மூடி முத்திரையிட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  

Written by - Chithira Rekha | Last Updated : Jul 29, 2022, 04:38 PM IST
  • கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு
  • உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, காவல்துறை அறிக்கை தாக்கல்
  • விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பு
”யாரையும் காப்பாற்ற முயலவில்லை” - கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் காவல்துறை அறிக்கை தாக்கல் title=

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அதிகாரி செயல்பட வேண்டும் என்வும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி உடற்கூறாய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டதாக கூறி, அவை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும் காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார். பின்னர் டி.ஐ.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யுடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அசன் முகமது ஜின்னா தெரிவித்தார். சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகளால் காவல்துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது?

மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும், தமிழக அரசால் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளதாகவும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

அப்போது நீதிபதி, இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது என்றும், விரைவில் பள்ளியிலேயே வகுப்புகளை தொடங்கி நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டாமென அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு அறிவுறுத்தியதுடன், அவை தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார். இதுதொடர்ந்து முன்னிலைபடுத்தப்படுவதால், அவற்றை பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலை மேலும் மோசமாவதாக ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

காவல்துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மேலும் படிக்க | தற்கொலை எண்ணம் வரவேக்கூடாது - மாணாக்கர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News