கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன?

திருச்சியில் நேற்று போலீஸ் SI ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2021, 06:35 PM IST
கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன? title=

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்றிரவு வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்திருக்கிறார்கள். இதனை பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றிருக்கின்றனர். இதையடுத்து, எஸ்.ஐ பூமிநாதன், அவர்கள் ஆடுகளைத் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாக்கி டாக்கியில் சக போலீசாருக்கு தகவலைச் சொல்லிவிட்டு அவர்களை விரட்டிச் சென்றிருக்கிறார்.

ALSO READ வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

அப்போது, சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருந்ததால் ஆடு திருடர்களால் செல்ல முடியவில்லை. வேகமாக பின் தொடர்ந்து வந்த எஸ்ஐ பூமிநாதன் ஓடி விடாமல் ஒருவனை பிடித்து நிறுத்தி இருக்கிறார். பின்னர் 2 பேரையும் கீழே உட்கார வைத்த பூமிநாதன் உடனடியாக எஸ்எஸ்ஐ சித்ரவேலிடம் செல்போனில்,  சீக்கீரம் வாய்யா அவங்களை பிடித்து விட்டேன் என இடத்தை கூறியிருக்கிறார்.

trichy

எஸ்எஸ்ஐ சித்ரவேலுக்கு அந்த இடம் தெரியவில்லை. இருந்தாலும் தான் அங்கு வந்து விடுவதாக கூறியிருக்கிறார். 
சுமார் 15 நிமிடமாக எஸ்எஸ்ஐ சித்ரவேல் வராததால் கீரனூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும், தனது நண்பரான சேகர் என்பவருக்கு பூமிநாதன் போன் போட்டுள்ளார். மேலும் தான் இருக்கும் இடத்தை பூமிநாதன் கூறியிருக்கிறார்.   சுமார் 10 நிமிடத்தில் போலீஸ்காரர் சேகர் அந்த பகுதிக்கு வந்திருக்கிறார். அவர் ரயில்வே சுரங்கப்பாதையின் மற்றொரு முனையில் வந்து விட்டதை புரிந்து கொண்டு சுற்றி வருவதாக கூறிவிட்டு சேகர் கிளம்பினார். இந்த இடைப்பட்ட நிமிடங்களில் பிடிபட்ட 2 திருடர்களும் எஸ்ஐ பூமிநாதனிடம் கெஞ்சி பாத்திருக்கின்றனர். அவர்களால் வயல்வெளியில் ஓடவும் முடியவில்லை. 

tda

மேலும், 2 போலீசாரும் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்கிற நிலையில்,  தற்செயலாக பூமிநாதன் திரும்பி செல்போனை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் திருடனில், ஒருவன் இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து பின் தலையில் வெட்டியுள்ளனர். பூமிநாதன் திரும்பி பார்க்க முயற்சித்த போது தலை மற்றும் உடல்களில் வெட்டு விழுந்துள்ளது.  ரத்த வெள்ளத்தில் எஸ்ஐ பூமிநாதன் சரிந்தார். பின்னர், 2 பேரும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பித்திருக்கின்றனர். 

அடுத்த சில நிமிடங்களில்... 

எஸ்எஸ்ஐ சித்ரவேல் மற்றும் கீரனூர் போலீஸ் சேகர் இருவரும் சம்பவ இடத்திற்கு பார்த்த போது, எஸ்எஸ்ஐ பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் ஆடு திருடர்களை பூமிநாதன் விரட்டி செல்வதும், சுமார் ஒரு மணிநேரம் கழித்து திருடர்கள் மட்டும் திரும்பி செல்வதும் போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில், கொலையாளிகள் பல்சர் வாகனத்தில் சென்றாக தெரியவந்துள்ளது.

trichysi

இந்த கொலைச்சம்பவம் குறித்து  தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் கூறுகையில் எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.  பூமிநாதன் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்கப்படும்.  ஆடு திருடர்களை பிடிக்க பூமிநாதன் தனியாக செல்லவில்லை மற்றொரு காவலரோடு இணைந்து தான் சென்றார்.  அந்த காவலர் வழி மாறி பின் தங்கி விட்டார் எனவும் தெரிவித்தார்.

ALSO READ திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News