விஷவாயு தாக்குதல்: சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீச்சு

Last Updated : Apr 7, 2017, 10:45 AM IST
விஷவாயு தாக்குதல்: சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைகள் வீச்சு title=

சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. 

இதை சிரியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், அங்கு இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் சற்று தாழ்வாக பறந்து வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த வி‌ஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு சிரியா மற்றும் ரஷிய ராணுவம் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிரிய அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதை ரஷியா மறு ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. 

விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிரியாவே முழு பொறுப்பாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.  சிரிய ராணுவத்தின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவின் விமானப் படை தளம் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 

மத்திய தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போர்க்கப்பல்களில் இருந்து 60 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவை விஷகுண்டு தாக்குதல் நடத்திய சாய்ரத் விமானப்படை தளத்தின் மீது விழுந்து தாக்கியது. 

அமெரிக்க அதிபரான பிறகு டொனால்டு டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடத்தும் படி முதன் முறையாக கையெழுத்திட்டுள்ளார். இதை அவரே வெளியிட்டுள்ளார். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷவாயு தாக்குதலை கண்டித்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் நடவடிக்கையை ஆக்கிரமிப்பு செயல் என சிரியா குற்றம் சாட்டியுள்ளது. 

விஷவாயு தாக்குதல் மற்றும் அமெரிக்காவின் அதிரடி ஏவுகணை வீச்சு சர்வதேச அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending News