தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

Same Sex Marriage: இந்தியாவில் LGTQIA+ சமூகத்தினரின் தன்பாலின திருமணங்களுக்கு சட்டரீதியிலான அங்கீகாரம் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2023, 03:26 PM IST
  • இந்த வழக்கு 5 நிதிபதிகள் கொண்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.
  • தன்பாலின திருமணத்திற்கு மூன்று நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • மற்ற இரண்டு நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தன்பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை - உச்ச நீதிமன்றம் அறிவிப்பு title=

Same Sex Marriage: கடந்த 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தன் பாலின உறவை குற்றமற்றது என அறிவித்தது. குறிப்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவை நீக்கியதை அடுத்து, ஒரே பாலினத்தவர்களிடையே ஒருமித்த உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, தன் பாலின திருமணங்களை சட்ட ரீதியாக அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தன் பாலின திருமணங்களை ஏற்காத இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் மற்றும் பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

குழு அமைக்க பரிந்துரை

இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இதன்பின் மே 11ஆம் தேதி அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

அதில், தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்கு விடப்பட்ட பிரச்சினை என்றும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்க முடியாது என அறிவித்தாலும், திருமணம் செய்துகொள்வதையோ அல்லது சேர்ந்து வாழ்வதையோ யாராலும் தடுக்க இயலாது. அப்படி தடுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகவும். மத்திய, மாநில அரசுகள், தன்பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | மகளிருக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்: சோனியா காந்தி உறுதி

இவர்களுக்கான சிறப்பு அழைப்பு எண் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இந்த ஜோடிகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்ப வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இத்தகைய குழந்தைகள் கட்டாய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் எந்த ஒரு நபரும் ஹார்மோன் சிகிச்சைகளுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தன்பாலின ஜோடிகள் ரேஷன் கார்டுகள், ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் நாமினியை நிர்ணயம் செய்வது பிரச்சினைகள் போன்ற நடைமுறை சார்ந்த பிர்சனையை பூர்த்தி செய்ய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தன்பாலின தம்பதிகளும் தத்தெடுத்தலும்...

நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில், பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் இணைந்து வாழ்வதற்கான உரிமையை கட்டுப்படுத்த இயலாது என்று குறிப்பிட்டார், மேலும் திருமணமாகாத தம்பதிகள்,  LBTQI+ சமூகத்தை சேர்ந்த தம்பதிகள் உட்பட, கூட்டாக ஒரு குழந்தையை தத்தெடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார். தன்பாலின தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என ஒரு சட்டம் கருத முடியாது என்றும் அவ்வாறு செய்வது பாகுபாடு காட்டுவதாக அமையும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தின் (CARA) வழிகாட்டுதல்கள் குறித்தும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். சிறார் நீதிச் சட்டத்தின் மூலம் திருமணமாகாத தம்பதிகள் தத்தெடுப்பதற்கு வழி இல்லை என்றும், அவ்வாறு செய்வது குழந்தையின் நலனுக்காக என்பதை மத்திய அரசு எந்த இடத்திலும் நிரூபிக்கவில்லை என்றும் கூறினார். எனவே திருமணமாகாத தம்பதிகளைத் தடுப்பதில் CARA அதன் அதிகாரத்தை மீறியுள்ளது என்றும் நீதிபதி சந்திரசூட் தீர்ப்பில் கூறினார்.

"திருமணமாகாத தம்பதிகள் தங்கள் உறவைப் பற்றி தீவிரமாக இல்லை என்று கருத முடியாது. திருமணமான ஆண் - பெண் தம்பதிகள் மட்டுமே ஒரு குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை" என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 15ஆவது பிரிவு மீறல்

CARA ஒழுங்குமுறை 5(3) தன்பாலின தம்பதிகளுக்கு எதிராக மறைமுகமாக பாகுபாடு காட்டுகிறது என்றும் நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார். ஒரு LGBTQI+ நபர் ஒரு தனியாக மட்டுமே தத்தெடுக்க முடியும் என்பது LGBTQI+ சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார். CARA வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பின் 15ஆவது பிரிவை மீறுவதாகும். அரசியலமைப்பின் 15ஆவது பிரிவு மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தன்பாலின திருமண வழக்கு... தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியவை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News