தன்பாலின திருமண வழக்கு... தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியவை என்ன?

Same Sex Marriage Verdict: வேற்று பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் சார்ந்த நன்மைகள் மற்றும் சேவைகள், தன் பாலின ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகவே அமையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2023, 03:27 PM IST
  • குடும்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் மனித பண்பின் முக்கிய பகுதியாகும் - சந்திரசூட்
  • இந்த நீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது - சந்திரசூட்
  • சட்ட இயற்றும்படி நாடாளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ உத்தரவிட முடியாது - சந்திரசூட்
தன்பாலின திருமண வழக்கு... தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியவை என்ன?

Same Sex Marriage Verdict: கடந்த 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தன் பாலின உறவை குற்றமற்றது என அறிவித்தது. குறிப்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவை நீக்கியதை அடுத்து, ஒரே பாலினத்தவர்களிடையே ஒருமித்த உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தன் பாலின திருமணங்களை சட்ட ரீதியாக அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

Add Zee News as a Preferred Source

தன் பாலின திருமணங்களை ஏற்காத இந்து திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் மற்றும் பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளை எதிர்த்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 

இந்த வழக்கின் விசாரணையின் போது, சட்ட ரீதியான தன் பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இந்த விவாகரத்தில் முடிவை அறிவித்தால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இதில் நீதிமன்றம் எந்த அரசியல் சாசனப் பிரகடனத்தையும் செய்யக் கூடாது என்று மத்திய அரசு கூறியிருந்தது. 

மேலும் படிக்க | TiE Delhi-NCR இன் நிலைத்தன்மை உச்சி மாநாடு 2023

இந்த விவகாரத்தில் மணிப்பூர், ஆந்திரா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பதில்களைப் பெற்றதாக தெரிவித்தது. மேலும், அவற்றில் ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் தன் பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான மனுவை நிராகரித்ததாகவும் மத்திய அரசு கூறியது. மற்ற மாநிலங்களில் இதுகுறித்து ஆய்வு செய்ய கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தன் பாலின திருமணம் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்குவது குறித்து, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கூறுகையில், "இந்த அனுமதியை வழங்குவது மிகவும் மோசமானது என்று நான் நினைக்கிறேன். இது இந்தியாவில் நிலவும் எங்கள் அமைப்புக்கு ஏற்ப இருக்காது. இந்தியா ஒரு தனித்துவமான மனநிலை மற்றும் சட்ட ஒழுங்கை கொண்டுள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமண்ட் ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டிய கடமை என்பதால், உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் அப்படி ஒரு சட்டத்தை உருவாக்குவது தவறானது. நிர்வாகம் மற்றும் சட்டமன்ற விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது" என்றார்.

மேலும், கடந்த மே 11ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. அந்த வகையில், இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அறிவித்து வருகிறார். அதாவது, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நான்கு விதமான தீர்ப்புகள் வந்துள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கிய கருத்துகள்

- இந்த நீதிமன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது. அதன் ஷரத்துகளை விளக்கி, அதற்குப் பலனைத் தர மட்டுமே முடியும். சிறப்புத் திருமணச் சட்டத்தில் மாற்றம் வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த நீதிமன்றம் சட்டமியற்றும் களத்திற்குள் நுழையாமல் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் ஒரு நிலையான மற்றும் மாற்றமில்லாத ஒன்று என கூறுவது தவறானது.

- ஒருவருக்கொருவர் அன்பையும் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்வதே நம்மை மனிதனாக உணர வைக்கிறது. நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் நம்மை மனிதாக வைத்திருக்கிறது. இந்த உறவுகள் பல வடிவங்களில் இருக்கலாம். பிறந்த குடும்பங்கள், காதல் உறவுகள் போன்று பல உறவுநிலைகள் உள்ளன.

- குடும்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் மனித பண்பின் முக்கிய பகுதியாகும் மற்றும் சுய வளர்ச்சிக்கு முக்கியமானது. வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்த உரிமை 21ஆவது பிரிவின் கீழ் வாழும் உரிமை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின்கீழ் செல்கிறது.

- LGBTQ+ சமூகத்தினர் தங்கள் வாழ்க்கையின் தார்மீக முடிவுகளை தீர்மானிக்க உரிமை உண்டு. சுதந்திரம் என்பதன் பொருள், ஒருவர் விரும்புவதை அடைய வாய்ப்பளிப்பதே ஆகும். LGBTQ+ சமூகத்தினர்களுக்கு பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆண் - பெண் உறவு என்ற வேற்று பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் சார்ந்த நன்மைகள் மற்றும் சேவைகள், தன் பாலின மற்றும் LGBTQ+ சமூக ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை தடுப்பதாகவே அமையும்.

மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் சில உத்தரவும் பிறப்பித்துள்ளது. அதில்,"தன்பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவர்களுக்கான சிறப்பு அழைப்பு எண் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இந்த ஜோடிகள் பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்ப வசதிகளை செய்து தர வேண்டும். இத்தகைய குழந்தைகள் கட்டாய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு நபரும் ஹார்மோன் சிகிச்சைகளுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகளிருக்கான இடஒதுக்கீட்டு சட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்: சோனியா காந்தி உறுதி
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News