வரும் திங்கள் கிழமை வரை கர்நாடகா சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த இரண்டு கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறமால் அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது!

Last Updated : Jul 20, 2019, 03:37 PM IST
வரும் திங்கள் கிழமை வரை கர்நாடகா சட்டப்பேரவை ஒத்திவைப்பு! title=

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த இரண்டு கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறமால் அவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது!

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பிற்பகல் 1.30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார்.

பெரும் பரபரப்பிற்கிடையே நேற்று கூடிய கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான காரசார விவாதத்துடன் முடிவடையந்தது. விவாதத்தின் போது ஆளுநர் விதித்த கெடு குறித்து பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், ஆளுநரின் கடிதம் முதல்வருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.

மேலும், தன்னை நிர்பந்திக்க, இதுவரை யாரும் பிறக்கவில்லை எனவும் சபாநாயகர் காட்டமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசரப்பட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பாஜகவினர் ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே மாலை ஆறு மணிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு கெடு விதித்து கடிதம் அனுப்பினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவையில் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது காதல் கடிதம் தன்னை மிகவும் கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உடன் விமானத்தில் பயணிக்கும் படத்தை வெளியிட்ட அவர், கடந்த பத்து நாட்களாகவே எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுவதாக கூறிய குமாரசாமி, ஆளுநரின் கடிதங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஆளுநர் விதித்த 2 கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலே அவை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுக்கொண்டே சென்றதால், பேரவையை சபாநாயகர் ரமேஷ் குமார் திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.

Trending News