பணம் மதிப்பிழப்பு: கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் போராட்டம்...

பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2018, 10:01 AM IST
பணம் மதிப்பிழப்பு: கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் போராட்டம்... title=

பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு....! 

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்திட்டத்தால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ATM வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டின் எதிர்காலம் கருதி மக்கள் சிரமங்களை 50 நாட்களுக்கு பொறுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 99.3 விழுக்காடு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதில், திட்டம் படுதோல்வி என்கிறார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.பி.கிருஷ்ணன். ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள்தான் பலனடைந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கருப்புப் பணத்தை வங்கியில் முதலீடு செய்தவர்கள் குறித்த விசாரணைத் தொடர்பாக மாபெரும் மவுனமே நிலவுவதாக கூறும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் பிரச்சராத்துக்கு மட்டுமே பயன்படும் என்று விமர்சித்தார். 

இந்நிலையில், பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்த இரண்டாம் ஆண்டை நாட்டின் கருப்பு தினமாக அனுசரிக்கும் காங்கிரஸ் இன்று நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்த உள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவித்த மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இன்றைய போராட்டங்களில் கலந்துக் கொள்கின்றனர். 

 

Trending News