மத்திய பிரதேசத்தில் யாருக்கு பெரும்பான்மை? காங்கிரஸ், பாஜகவிடம் எத்தனை இடங்கள்!!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடருமா? ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பதவி கிடைக்குமா? அல்லது பாஜக ஆட்சி அமைக்குமா? அரசியல் விளையாட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 9, 2020, 11:47 PM IST
மத்திய பிரதேசத்தில் யாருக்கு பெரும்பான்மை? காங்கிரஸ், பாஜகவிடம் எத்தனை இடங்கள்!! title=

மத்திய பிரதேசம்: இன்று மத்திய பிரதேச அரசியலில் (Madhya Pradesh Political) வெடித்த பூகம்பம், தலைப்பு செய்திகளில் இடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தை சேர்ந்த ஆறு அமைச்சர்கள் உட்பட 17 எம்.எல்.ஏக்கள் விமானம் மூலம் பெங்களூருக்கு சென்றனர். இந்த செய்தி மத்திய பிரதேச (Madhya Pradesh) அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் கமல்நாத் (Kamal Nath) தலைமையிலான அரசு தப்புமா? அல்லது பாஜக உரிமை கோருமா? என்று பார்ப்போம் 

கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்களா?
கடந்த ஆண்டு, கர்நாடகாவில் (Karnataka) ஜே.டி.எஸ் (JDS) மற்றும் காங்கிரஸின் (Congress) 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து சட்டசபையில் பெரும்பான்மை குறைந்தது. அவர்களின் ஆதரவோடு, தேர்தலில் 105 இடங்களை வென்ற பாஜக(BJP), எளிதாக கர்நாடகாவில் அரசாங்கத்தை அமைத்தது. இதே சூத்திரத்தை மத்திய பிரதேசத்திலும் பாஜக (BJP) பின்பற்றலாம். மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற இடங்கள் உள்ளன. 2 எம்.எல்.ஏக்கள் மறைவை அடுத்து தற்போது 228 உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரசில் 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இது தவிர, 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் 1 எஸ்பி எம்எல்ஏ ஆகியோர் காங்கிரஸ் தலைமையிலான கமல்நாத் (Kamal Nath) அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு தற்போது 121 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவில் 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை எண்ணிக்கை தேவை 116 பேர் ஆகும்.

பெங்களுருக்கு சென்றுள்ள 17 எம்.எல்.ஏக்கள் பாஜக (BJP) பக்கம் மாறினால், அவர்களின் பலம் 124 ஆக ஆதிகரிக்கும். ஆனால் கிளர்ச்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்தால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், சட்டசபையின் பலம் 211 ஆக மாறும். இந்த வகையில், அப்பொழுது பெரும்பான்மை எண்ணிக்கை 111 ஆக இருக்கும்.

பாஜகவில் தற்போது 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பெரும்பான்மை எண்ணிக்கை 111 ஆகிவிட்டால், பாஜக அரசு ஆட்சி அமைக்க மேலும் ஐந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், 2 பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு எஸ்பி மற்றும் 4 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவை கோரலாம். ஒருவேளை இவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால், அவர்களை தகுதி நீக்கம் செய்யமுடியாது. இந்த வகையில் 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைக்கும்.

மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) கமல்நாத் அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் பாஜக எவ்வாறு ஆட்சிக்கு வர முடியும் என்பதை மேற்கண்ட இரண்டு காரணங்களை அறிந்து கொண்டோம். 

ஆனால் இது அரசியல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதாவது கமல் நாத் தனது நாற்காலியைக் காப்பாற்ற சமரசம் செய்யலாம். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவி அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia) விரும்புகிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு எதிர்பார்ப்புகளில் ஒன்றை ஜோதிராதித்யாவுக்கு வழங்குவதன் மூலம் கமல் நாத் தனது நாற்காலியைக் காப்பாற்றலாம்.

மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) காங்கிரஸ் ஆட்சி தொடருமா? ஜோதிராதித்ய சிந்தியா விருப்பப்பட்ட பதவி கிடைக்குமா? அல்லது பாஜக பெரும்பான்மையை நிருபித்து ஆட்சி அமைக்குமா? அரசியல் விளையாட்டின் முடிவு என்னவாக இருக்கும் என்று பார்க்க காத்திருப்போம்.

Trending News