வெண்மைப் புரட்சி நாயகன் - யார் இந்த மில்க்மேன் வர்கீஸ் குரியன்!

இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு காரணமான வர்கீஸ் குரியன், இந்தியாவின் வெண்மைப் புரட்சி நாயகன் என அழைக்கப்படுகிறார். "மில்க் மேன்" வர்கீஸ் குரியன் பிறந்த நாளை தேசிய பால் தினமாக நாடு கொண்டாடுகிறது

Written by - S.Karthikeyan | Edited by - Shiva Murugesan | Last Updated : Nov 26, 2021, 05:39 PM IST
வெண்மைப் புரட்சி நாயகன் - யார் இந்த மில்க்மேன் வர்கீஸ் குரியன்! title=

இன்று காலை (வெள்ளிகிழமை) வழக்கம்போல் பால் பாக்கெட்டுகள் வாங்க கடைக்கு சென்றவர்கள், ஆவின் பால் பாக்கெட்டுகளில் இருந்த ஒரு புகைப்படத்தைப் பார்த்து யார் இவர்? என யோசித்துள்ளனர். அதில், புகைப்படத்துக்கு கீழே வர்கீஸ் குரியன் என தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத்தப்பட்டிருந்தது. அவருடைய பெயரை ஏன் ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் போடவேண்டும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், கடைகளிலும், கூட்டுறவு பால் சங்கங்களிலும் எளிதாக உங்களால் காலை, மாலை நேரங்களில் பால் வாங்க முடிகிறதென்றால் அதற்கு காரணமானவர் இவரே. அவர் தான் வர்கீஸ் குரியன். இந்தியாவின் வெண்மைப் புரட்சி நாயகன் என அழைக்கப்படுகிறார்.

1950 மற்றும் 60-களில் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கவில்லை. கடைகளில் மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது. பச்சிளம் குழந்தைகளுக்கு கூட பால் கிடைக்காமல் இருந்த நிலையில், இதில் இருக்கும் சந்தை மதிப்பு மற்றும் மக்களுக்கான அத்தியாவசியத்தை உணர்ந்து அவர் எடுத்த முன்னோடி திட்டத்தினால், பால் பொருட்கள் அனைத்து தரப்பு மக்களையும் இன்றும் எளிதாக சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

வர்கீஸ் குரியன், 1921 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். அன்றைய பிரிட்டீஷ் அரசின் உதவித் தொகை மூலம் அணுசக்தி துறையில் வெளிநாடு சென்று படிக்க விண்ணப்பித்தார். மேலும் பால் பண்ணை பொறியியல் பிரிவுக்கு உதவித் தொகை கிடைத்தது.

 

ALSO READ |  நீங்கள் வாங்கும் பால் கலப்படம் அற்றது தானா; கண்டுபிடிப்பது எப்படி..!!

வெளிநாட்டில் பயிற்சி முடித்த பிறகு இந்தியா திரும்பிய அவர், குஜராத் மாநிலம், ஆனந்தில் இருந்த பால் பண்ணையில் அரசுப் பணியில் சேர்ந்தார். அங்கு அமுல் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, பால் கூட்டுறவு மூலம் விவசாயிகளின் வாழ்வினை மேம்புறச் செய்த அவரின் திட்டம், படிப்படியாக அரசின் கவனத்தையும் பெற்றது. 200 லிட்டர் பாலில் தொடங்கிய அவரது பால் கூட்டுறவு திட்டம், வெற்றியை நோக்கி சென்றது. அரசுப் பணியைவிட்டு கைரா மாவட்டத்தின் பால் யூனியன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட குரியன், பால் கூட்டுறவு சங்கத்தினை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

அவரது அயராத முயற்சியினால் 1955 ஆம் ஆண்டு கைராவில் முதல் பால் பண்ணை வெற்றிகரமாக திறக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் ஆனந்த் மில்க் யூனியன் லிட் என்ற நிறுவனமாக வளர்ந்து அமுல் என பிராண்ட் செய்யப்பட்டது. அரசும் ஒத்துழைப்பு கொடுத்ததால், 1960 -களில் இதேபோன்ற திட்டத்தை நாடு முழுமைக்கும் ஏற்படுத்துமாறு மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட குரியன் நாடு முழுவதும் பால் கூட்டுறவு உற்பத்தி சங்கங்களை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தினார். அதனடிப்படையில் தேசிய பால்வள வாரியம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பால் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு தேசமாக உருவாக்கிக் காட்டினார். இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு காரணமான வர்கீஸ் குரியன், இந்தியாவின் வெண்மைப் புரட்சி நாயகன் என அழைக்கப்படுகிறார். 

ALSO READ |  10 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு வேலை தருவீர்களா; PETA அறிவுரைக்கு அமுல் பதிலடி

பல வெளிநாட்டு கம்பெனிகள், அரசியல் இடர்பாடுகள் என அனைத்தையும் கடந்து இதனை சாதித்துக் காட்டினார். அவரின் இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு, பதம் விபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதேபோல், உலக உணவு பரிசு, சமஸ்வாயா புரஸ்கர் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற அவரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளும், இதேபோன்ற ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்த அழைத்தன. ஆனால், அந்நாட்டில் நிலவிய பல்வேறு அரசியல் சூழல் காரணங்களால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமைக்க முடியவில்லை.

1968 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை, சுமார் 33 ஆண்டுகள் தேசிய பால்வள வாரியத்தின் சேர்மேனாக இருந்த குரியன், 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி காலமானார். தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட பால் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதற்கும் வர்கீஸ் குரியன் போட்ட விதையே காரணம்.

ALSO READ | விரைவில் கழுதை பால் விற்பனை தொடக்கம்; 1 லிட்டர் விலை ரூ .7000; நன்மைகள் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News