கவியரசர் கண்ணதாசன் - காவிய தாயின் மூத்த மகன்

கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் இன்று

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 24, 2022, 12:22 PM IST
  • கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 96ஆவது பிறந்தநாள்
  • தமிழ் இலக்கியத்தில் எந்தக் காலத்திலும் தவிர்க்க முடியாதவர் கண்ணதாசன்
 கவியரசர் கண்ணதாசன் - காவிய தாயின் மூத்த மகன்  title=

கண்ணதாசன். இந்தப் பெயர் தமிழ் சமூகத்திலும், தமிழ் பாடல்களிலும், இலக்கியங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்று. ஒருவருக்கு தொட்டிலில் தொடங்கி அவர் எட்டுக்காலில் செல்லும்வரை கண்ணதாசனின் வரிகள் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

கண்ணதாசனை ஒரு கவிஞர், பாடலாசிரியர் என்ற வட்டத்துக்குள் மட்டும் சுருக்கக்கூடாது. அப்படி சுருக்கினாலும் அதில் சுருங்கக்கூடியவர் இல்லை கண்ணதாசன்.

Kannadhasan

அவர் அத்தனையையும் மாற்ற முற்பட்டார். சில விஷயங்களை மாற்றவும் செய்தார். திருக்குறளுக்கு உரை எழுதும்போது அவரது அதிகார வரிசை, ‘காமத்துப் பால், பொருட் பால், அறத்துப் பால்’ என்பதுதான். போகிறப்போக்கில் எதையேனும் மாற்றிவைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அவர் இந்த அதிகார மாற்றுதலை செய்யவில்லை. 

மாறாக  “காமத்துப்பால்தான் முதலில் வந்திருக்க வேண்டும். அதன் மூலம் பெறும் பிள்ளை செல்வத்துக்காக பொருள் சேர்க்க வேண்டும். சேர்த்த பொருளை வைத்துக்கொண்டு அறம் செய்ய வேண்டும்” என விளக்கமளித்தார். வள்ளுவர் காலத்தில் கண்ணதாசன் இருந்திருந்தால் நிச்சயம் கண்ணதாசன் அவரை மொழியில் வம்புக்கு இழுத்திருப்பார்.

Kannadhasan

இப்படி கண்ணதாசனின் எழுத்துக்கள், பேச்சுக்கள் என அனைத்துமே மாற்றத்தை விரும்பியது. தனக்கென்று ஒரு பாடல் எழுதவில்லையே என்று கூறிய தன் மகனுக்காகவே ‘ஏன் பிறந்தாய் மகனே’ பாடல் எழுதியதெல்லாம் எந்த கவிஞனாலும் முடியாதது. ஏனென்றால் எந்த ஒரு படைப்பாளியும் தன்னை குறைத்து மொழியை வளப்படுத்த அவ்வளவு சீக்கிரம் துணியமாட்டார்.

வாழ்க்கையின் எந்த நிலைக்கு சென்றாலும் அந்த நிலைக்காக கண்ணதாசன் பாடல்களை எழுதி வைத்து சென்றிருக்கிறார். 70ஸ் கிட்ஸ் தொடங்கி இன்றைய 2K கிட்ஸ்வரை அனைவரது ப்ளே லிஸ்ட்களிலும் கண்ணதாசன் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அதுதான்.

Kannadhasan

அதேசமயம், கண்ணதாசனின் வழி ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்து வார்த்தைகளை எடுக்கும்போது சிறிது சொதப்பினாலும் அந்த படைப்பு சுய பச்சாதாபம் என்ற வட்டத்துக்குள் சென்றுவிடும். கண்ணதாசனின் ஒரு வரிகூட அந்த வட்டத்துக்குள் சென்றதில்லை.

காலங்கடந்து கண்ணதாசன் நிற்பதற்கும் அவர் எழுதியதுபோல் மற்றவரால் இன்னமும் எழுத முடியாததற்கும் காரணம், கண்ணதாசன் அறிவையும், ஞானத்தையும் வளர்த்துக்கொண்டவர் அல்ல. அதுவாகவே அவருக்குள் விரும்பி வளர்ந்தது. அதனால்தான் அவரால் பாடல்கள் எழுத 14 வயதில் சென்னைக்கு புறப்பட முடிந்தது. 

Kannadhasan

படைப்புகளை உருவாக்குபவன் படைப்பாளி என்றால் படைப்பாளியை உருவாக்குபவன் எவ்வளவு பெரிய படைப்பாளியாக இருக்க வேண்டும். கண்ணதாசன் எழுதிய பாடல் இல்லையென்றால் வாலி என்ற மிகச்சிறந்த பாடலாசிரியர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்க மாட்டார்.

ஒருசமயத்தில் பாடல்கள் எழுத வாய்ப்புகள் குறைந்தபோது விஸ்வநாதா வேலை வேண்டும் என்று பாடலிலேயே வெளிப்படையாக கோரிக்கை வைத்தார். அந்தக் கோரிக்கையை கண்டு எவரும் சிரிக்கவுமில்லை, பரிதாபப்படவுமில்லை. மாறாக கண்ணதாசனால் எப்படி இதனை பாட்டுக்குள் வைக்க முடிந்தது என ஆச்சரியப்படவே செய்தனர்.

Kannadhasan

கண்ணதாசனின் சிறப்புகளில் முக்கியமான ஒன்று அவர் எழுதிய பல பாடல்களை தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தே எடுத்துக்கொண்டார். சாதாரணமாக சில படைப்புகள் படைத்துவிட்டாலே தன் வாழ் நிலையை மறந்து தூரமாய் செல்பவர்கள் மத்தியில் கண்ணதாசன் மட்டும்தான் எப்போதும் வாழ்க்கையை நினைத்துப்பார்த்து, மக்களுடனேயே இருந்தார்.

கண்ணதாசனுக்கு பிறகு எத்தனையோ கவிஞர்கள் வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள், வரவிருக்கிறார்கள். ஆனால் அத்தனைப் பேருக்குமே கண்ணதாசன் ஆரம்பப் புள்ளி.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்தான் காவிய தாயின் மூத்த மகன்.

Kannadhasan

சக மனிதன் மீது அக்கறை காட்ட தயங்கும் சமூகத்தில் கண்ணதாசன் மட்டும்தான் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது அக்கறை காட்டி எந்த மனிதனும் நிலை தாழ்ந்துவிடக்கூடாது என்பதையும், ஒரு மனிதன் எதனை வைத்து மதிப்பிடப்படுகிறான் என்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் தனது பாடல்களில் கூறிக்கொண்டே இருந்தார். 

மேலும் படிக்க | மாமனிதன் திரை விமர்சனம் - மனிதர்கள் சுருங்கிப்போன உலகத்தில் ஒரு மாமனிதன்

கண்ணதாசனுக்கு வாழ்க்கையை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என கேட்டவர்களுக்கு கண்ணதாசனே இப்படி பதிலளித்திருக்கிறார்; “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்தேன். அதனால் இப்படி வாழக்கூடாது என்று சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறது”.  ஆம், இந்தச் சமூகம் வாழ்க்கைக்கென்று போட்டு வைத்திருந்த அத்தனை எல்லைகளையும் மீறி பலரை மீட்டவர் கண்ணதாசன். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News