)
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடங்குவதற்கு சற்று முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களம் இறங்கும் நிலையில், இதுவரை சூப்பர் கேப்டனாக இருந்த தோனியின் மீது அனைவரின் கவனம் குவிந்துள்ளது. அணியை வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு இல்லாமல், அவர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே கேப்டனாக இருந்தபோது தோனி தன்னை நிரூபித்துவிட்டார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து அணியை வழிநடத்தி வரும் எம்.எஸ். தோனி, ஐந்து ஐபிஎல் பட்டங்களை பெற்றுத் தந்துள்ளார். மொத்தம் 14 சீசன்களில் பத்து முறை இறுதிப் போட்டியை எட்டிய அணி என்ற அற்புதமான சாதனையுடன், தலை சிறந்த கேப்டனாக ’தல’ தோனி ஐபிஎல் வரலாற்றில் தனது முத்திரையை பதித்துவிட்டார்.
உலகப் புகழ் பெற்றவராக இருந்தாலும், எளிமையான செயல்களால் அனைவரின் மனதையும் கவரும் தோனியின் இன்றைய செயல் அவர், எவ்வளவு புகழ் பெற்றாலும், தனது இயல்பில் இருந்து மாறவில்லை என்பதை புரிய வைத்துவிட்டது.
வைரலான வீடியோ ஒன்றில், மகேந்திர சிங் தோனி, மைதானத்தில் ஒரு பெட்டியை எடுத்துச் செல்ல உதவும் காட்சி இடம் பெற்றுள்ளது. பணிவான அவரது இயல்பும், எந்த வேலையையும் அவர் பிரித்துப் பார்ப்பதில்லை என்ற அவரது எளிமையையும் வெளிப்படுத்தியதால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
MS Dhoni helping the CSK support staff at Chepauk.
— Johns. (@CricCrazyJohns) March 22, 2024
- A humble human being, MS. pic.twitter.com/IDlBNEmDDZ
கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தோனி இன்னும் நெருக்கமாகிவிட்டார் என்றே சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் போடப்படும் கமெண்டுகள் காட்டுகின்றன.
இந்த ஐபிஎல் சீசனே, தோனி விளையாடும் கடைசி சீசனாக இருக்கக் கூடும் என கூறப்படும் நிலையில், அவரது ஆன்-பீல்டு செயல்திறன் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஐபிஎல் 2023 இல் ஏற்பட்ட முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு, அறுவை சிகிச்சைக்குப் பிறகு தோனி முழு உடற்தகுதியுடன் ஐபிஎல்லுக்கு திரும்பியுள்ளார்.
கேப்டன் பதவியில் இல்லையென்றாலும், சிஎஸ்கேவிற்கு தோனியின் திறமை மிகவும் முக்கியமானது. கூர்மையான கிரிக்கெட் அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் போட்டியில் வெற்றிபெறும் திறன்களுடன், CSK அணி இந்த ஐபிஎல் பட்டத்தையும் பெறவேண்டும் என்று தோனி முழு மூச்சுடன் களம் இறங்கியுள்ளார்.
சேப்பாக்கத்தில் உள்ள காட்சி: ஐபிஎல் 2024 இன் கிராண்ட் ஓபனிங்கின் ஒரு பார்வை
சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே ஐபிஎல் 2024 இன் தொடக்க ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வந்து குவிந்துள்ளனர்.