ஐபிஎல் 2017 பைனல்: புனே அணியை வீழ்த்தி மும்பை 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது

Last Updated : May 22, 2017, 09:53 AM IST
ஐபிஎல் 2017 பைனல்: புனே அணியை வீழ்த்தி மும்பை 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது  title=

10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன.

ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைப்பெற்றது.

இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை 1 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

இந்நிலையில், நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. சிம்மன்ஸ்(3), பார்த்திவ் பட்டேல்(4) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மாவும் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனால் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தடுமாறியது. வந்த வேகத்தில் சிக்ஸர் விளாசிய பொல்லார்டும் 7 ரன்களில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா(10), கேவி.சர்மா(1)ரன்களில் ஆட்டமிழக்க 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது மும்பை இந்தியன்ஸ். இதனால் 100 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி எட்டுமா என்ற சந்தேகம் எழுந்தது. இறுதியில் குணால் பாண்டியா இறுதி வரை நின்று விளையாடி 47 ரன்கள் குவித்து ஆட்டத்தில் இறுதி பந்தில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

புனே அணி தரப்பில்:-

உனந்த்கண்ட், ஜம்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் திரிபாதி பேட்டிங் செய்தனர். 

3 வது ஓவரிலேயே 3 ரன்களுடன் திரிபாதி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் பொறுமையாக ரன்கள் சேர்க்க, ரஹானே அதிரடியாக விளையாடி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து டோனி பேட்டிங் செய்ய வந்தார். இவர் 12 பந்துகளில் 10 ரன்களை எடுத்த அவர் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம் ஸ்மித் பொறுமையாக ரன்களை சேர்த்தார்.

18-வது ஓவர்வரை பொறுமையாகவே விளையாடி வந்ததால் வெற்றி இலக்கு தள்ளிக்கொண்டே போனது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜான்சன் பந்து வீசினார். 

முதல் பந்தில் மனோஜ் திவாரி பந்தை பவுண்டரிக்கு விளாசினார். இதனால், 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

2-வது பந்தில் திவாரி கேட்ச் ஆனார். இதையடுத்து கிறிஸ்டியன் களமிறங்கினார். அப்போது, 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 

3-வது பந்தில் ஸ்மித் கேட்ச் அவுட் ஆக புனே அணியின் சாம்பியன் கனவில் கல் விழுந்தது. 3 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.

4-வது பந்தில் ஒரு ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால், 2 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. 

5-வது பந்தில் கிறிஸ்டியன் இரண்டு ரன்களை எடுத்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில், கிறிஸ்டியனால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். 

மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

Trending News