ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள்

Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேர் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 4, 2023, 11:03 AM IST
  • சென்னை வந்த பயணிகளை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
  • அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட்டது.
  • வீடு திரும்புவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதியும் செய்துகொடுக்கப்பட்டது.
ஒடிசாவில் இருந்து வந்த சிறப்பு ரயில்... பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய 137 தமிழர்கள் title=

Odisha Train Accident: ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ ஏற்பட்ட நாட்டையே உலுக்கிய பெரும்‌ ரயில்‌ விபத்தில்‌ காயமடைந்த தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பயணிகளுக்குத்‌ தேவையான மருத்துவம்‌ மற்றும்‌ இதர உதவிகளைச்‌ செய்திடவும்‌, உயிரிழந்தவர்களைக்‌ கண்டறிந்து அவர்கள்‌ குடும்பத்தினருக்கு உதவிடவும்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ உத்தரவின்பேரில்‌, மீட்புக்‌ குழு அமைக்கப்பட்டது.

ஒடிசாவில் தமிழக குழு

இக்குழுவில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌, போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌, போக்குவரத்துத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ க.பணீந்திர ரெட்டி ஐஏஎஸ் ஆகியோர்‌ விபத்து நடந்த பாலசோர்‌ என்ற இடத்தில்‌ நடந்து வரும்‌ மீட்புப்‌ பணிகளைக்‌ கவனித்து வருகின்றனர்‌.

மற்றொரு குழுவான வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. குமார்‌ ஜயந்த்‌ ஐஏஎஸ், ஆசிரியர்‌ தேர்வாணையக்‌ குழுவின்‌ தலைவர்‌ அர்ச்சனா பட்நாயக்‌ ஐஏஎஸ் ஆகியோர்‌ ஒடிசாவில்‌ இதற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில்‌, ரயில்‌ விபத்தில்‌ உயிரிழந்த மற்றும்‌ காயமடைந்தவர்களின்‌ விபரங்களை சேகரித்தும்‌, மீட்புப்‌ பணிகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியும்‌ வருகின்றனர்‌.

137 பயணிகள் வருகை

அந்த வகையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில்‌ ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில்‌ மூலம்‌ 137 பயணிகள்‌ சென்னை வருகை தந்தனர்‌. இவர்களை சென்னை சென்ட்ரல் ரயில்‌ நிலையத்தில்‌ வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ கே.கே.எஸ்‌.எஸ்‌.ஆர்‌. ராமச்சந்திரன்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌, வருவாய்‌ நிர்வாக ஆணையர்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ எஸ்‌.கே. பிரபாகர்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ ககன்தீப்‌ சிங்‌ பேடி ஆகியோர்‌ வரவேற்றனர்‌. 

மேலும் படிக்க | அடுத்து என்ன என்பது மத்திய அரசுக்கு தெரியவில்லை - ரயில் விபத்து குறித்து ஆ. ராசா!

சிகிச்சைக்கு ஏற்பாடு

இன்று காலை ஒடிசாவில் இருந்து வருகை தந்த பயணிகளுக்கு சிற்றுண்டியும்‌ வழங்கப்பட்டது. இவர்களில்‌ 36 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 34 பயணிகள்‌ இராஜீவ்‌ காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‌. இவர்களில் அனுப்பி வைக்கப்பட்ட‌ 3 பயணிகள்‌ உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌. மற்ற பயணிகள்‌ சிறு சிகிச்சைக்குப்‌ பிறகு அவர்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்‌.

வீடு திரும்ப போக்குவரத்து வசதி

தமிழ்நாடு முதலமைச்சர்‌‌ உத்தரவிட்டதன்‌ அடிப்படையில்‌, ஒடிசா மாநிலத்திலிருந்து சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையத்திற்கு வந்தடைகின்ற பயணிகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும்‌ மேல்‌ சிகிச்சை மேற்கொள்ள 30 மருத்துவக்‌ குழுக்கள்‌ அமைக்கப்பட்டுள்ளன. மேலும்‌, இவர்களுக்குத்‌ தேவையான போக்குவரத்து வசதிக்கென அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ 7 பேருந்துகளும்‌, காவல்‌துறை மூலம்‌ 50 டாக்ஸிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டு தயார்‌ நிலையில்‌ உள்ளது. கூடுதலாக 10 அவசரகால ஊர்தியும்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ரயில்‌ நிலையத்தில்‌ வீல்‌ சேர்‌, ஸ்டிரெச்சர்‌ வசதிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, வருவாய்த்‌ துறை, சுகாதாரத்‌ துறை அலுவலர்கள்‌, வருகின்ற பயணிகளுக்குத்‌ தேவையான உதவிகள்‌ செய்திட பணியமர்த்தப்பட்டுள்ளனர்‌.

20 நிமிடத்தில் நடந்த கோர விபத்து 

கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் நேற்று முன்தினம் (ஜூன் 2) மாலை ஒடிசாவின் பாலசோரில் பயங்கரமாக மோதி விபத்தை சந்தித்தன. மாலை 6.50 மணியளவில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த லூப் தண்டவாளத்தில்,  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் கோளாறு காரணமாக சென்றுவிட்டது என தகவல்கள் கூறுகின்றன. 

இதனால், சரக்கு ரயிலில் மோதிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மெயின் தண்டவாளத்தில் விழுந்துள்ளது. இதையடுத்து, சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதாவது, 7.10 மணிக்கு பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ், மெயின் தண்டவாளத்தில் சரிந்துகிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெட்டிகளில் மோதி விபத்தானதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை, சுமார் 288 பேர் உயிரிழந்தனர் என்றும் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேலும் படிக்க | 'மறு வாழ்வு பெற்றுள்ளோம்' ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் சென்னையில் கண்ணீர்..!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News