சென்னை மக்களே... கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறக்க தாமதமாகலாம் - நாசுக்காக சொன்ன அமைச்சர்!

Kilambakkam Bus Terminus: ஜூன் மாதம் 3 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 30, 2023, 12:36 AM IST
  • இது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட உள்ளது.
  • கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை மக்களே... கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறக்க தாமதமாகலாம் - நாசுக்காக சொன்ன அமைச்சர்! title=

Kilambakkam Bus Terminus: சென்னை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டடத்தை அமைச்சர் சேகர்பாபு துறை அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார். 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர், சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.

வசதிகள் என்னென்ன?

இந்நிலையில், இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பேருந்துகள்-62) நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை அமைக்கப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் 60 மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. தனி அலுவலக கட்டடம், பாதுகாகப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் இருக்கைகள், 2 நகரும் படிக்கட்டுகள், கழிவறைகள், மாநகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் இங்கு அமைந்துள்ளது. 

காம்ப்ளக்ஸ் கட்டடம்

அடித்தளம், தரைத்தளம், மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இரு சக்கரவாகனங்கள், 324 நான்கு சக்கரவாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள், அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலுாட்டும் அறை, பயணச்சீட்டு
வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 280 சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை

முதல் தளம்

பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 பயணிகள் செல்லும் வகையில் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்துாக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதள் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைப்பட்டுள்ளது.

மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பசுமை பூங்கா

அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் 16 உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்
பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துப்
பணிகளும் முடிவடைந்த நிலையில் வருகிற ஜீன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஏப். 29) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

ஆய்வின் இறுதியாக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது,"பேருந்துநிலையம்  பணிமுடிவடையும் தருவாயில் உள்ளது. வருகிற ஜீன் மாதம் தமிழ்நாடு முதல்வரால் இப்பேருந்து நிலையம் திறக்கப்படும். பயணிகளுக்கு தேவையான முழுமையான பாதுகாப்பு, சேவைகள் என அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. தற்போது, கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் ஜூன் மாதத்திற்குள் இந்நிலையம் திறக்கப்படும்" என நாசுக்காக செய்தியாளர்களிடம் பதில் அளித்தார். 

மேலும்,"தற்காலிமாக காவலர்கள், சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். அதன்பிறகு நிரந்தமாக இரண்டு காவல்நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. மேலும் நடைமேடை வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் தவிர அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால்தான் சட்டமன்றத்தில் வருகிற ஜீன் மாதம் திறக்கப்படும் என நம்பிக்கையோடு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது" என்றார். 

மேலும் படிக்க | சென்னையில் சிக்கிய 55 சிலைகள்... போலீசார் மீட்டது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News