திடீர் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்க - PMK

தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 12:21 PM IST
திடீர் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்க - PMK title=

தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!

இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழ்நாட்டின் (Tamil Nadu) வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் விழுப்புரம், கடலூர் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பெய்த மழை (Rain) அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக உழவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உழவர்கள் அரும்பாடுபட்டு அறுவடை செய்து வைத்திருந்த நெல் மூட்டைகள் எதிர்பாராத மழையில் சிக்கி சேதமடைந்திருக்கின்றன.

கோடைக்காலம் வெகுவிரைவில் தொடங்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டு வந்த நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளில் தான் அனைவரும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் சனிக்கிழமை மாலை முதல் பெய்த மழையால், கடலூர் மாவட்டமும் புதுச்சேரியும் (Puducherry) தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வானமாதேவி, சிறுபாக்கம், கூடலையாத்தூர், எசனூர், குணமங்கலம், டி.ஆதிவராகநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கி விட்டன. கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மூட்டைகள் முளைவிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

ALSO READ | Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு

கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர் மழை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் காலம் தவறி பெய்த மழையால் கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களை பட்டியலிட முடியாது. மிகுந்த எதிர்பார்ப்புடன் சம்பா பருவத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டனர். ஆனால், அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்கள் அனைத்து வகை பயிர்களையும் சேதப்படுத்தி விட்டன. இத்தகைய அனைத்து சீற்றங்களையும் கடந்து மிகவும் சில உழவர்கள் தான் சம்பா பயிரை சாகுபடி செய்து சில நாட்களுக்கு முன் அறுவடை செய்தார்கள். அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்து வாங்கியக் கடனை அடைக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான், திடீரென பெய்த மழை அவர்களின் மிகச் சாமானியக் கனவுகளைக் கூட சிதைத்திருக்கிறது. மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாவிட்டால் அவர்கள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாவார்கள்.

ALSO READ | காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் EPS..

உலகிற்கு உணவு படைக்கும் சமுதாயம் உழவர்கள் தான். அவர்கள் கடவுள்களாக கொண்டாடப்பட  வேண்டும். ஆனால், அவர்கள் தான் சபிக்கப்பட்ட சமுதாயமாக உள்ளனர். இயற்கை கூட, யார் யாரோ செய்யும் தவறுகளுக்கு, உழவர்களைத் தான் இரக்கமின்றி தண்டிக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து உழவர்களைக் காப்பாற்ற தமிழக அரசால் தான் முடியும். கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து உழவர்களின் துயரங்களைப் போக்கிய தமிழக அரசுக்கு இதையும் செய்ய வேண்டிய கடமை உண்டு.

தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17% ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். ஆனாலும் உழவர்களின் நலன் கருதி இப்போது 20% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதை மேலும் தளர்த்தி, ஈரப்பத உச்சவரம்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஓரளவு குறைக்க முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும். அதன்படி மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து பாதிக்கப்பட்ட உழவர்களின் நலன்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News