சென்னை ரயில் நிலையத்தில் பெண் ஊழியர் குத்திக் கொலை

Last Updated : Jun 24, 2016, 12:14 PM IST
சென்னை ரயில் நிலையத்தில் பெண் ஊழியர் குத்திக் கொலை title=

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு குற்றவாளி எந்த தடையும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளான்.

இன்று காலை 6.30 மணியளவில், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ஒரு பெண்ணிடம், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். இவர்களது பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கிருந்து பெண் விலகிச் செல்ல முயன்றார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த நபர், அப்பெண்ணை கண்மூடித்தனமாக குத்திக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த பெண், சம்பவ இடத்திலேயே பலியானார்.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூரச் செயலைப் பார்த்த ரயில் பயணிகள், செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்தனர். பலர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், அப்பெண்ணின் கைப்பையில் இருந்த செல்பேசி மூலமாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். சென்னை சூளைமேடு சேர்ந்தவர் சுவாதி(24). இவரது தந்தை பெயர் கோபாலகிருஷ்ணன் என விசாரணையில் தெரியவந்தது.

கொலையாளி பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஒருதலைக் காதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தகவல்: தினமணி

Trending News