உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது: PMK

உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 24, 2021, 05:24 PM IST
உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை கட்டாயத் தகுதியாக்க கூடாது: PMK title=

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டத் தகுதியை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாலும் கூட, போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் செய்யப்படும் இந்த சீர்திருத்தம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பட்டமேற்படிப்பு அல்லது  எம்.பில் பட்டத்துடன்  நெட் அல்லது செட் எனப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தான் தகுதியாகும். ஒருவேளை முனைவர் பட்டம் பெற்றிருந்தால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்காவிட்டாலும் உதவிப் பேராசிரியராக முடியும். ஆனால், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் நோக்குடன் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம்,  தகுதித் தேர்வில் தேர்ச்சி ஆகிய இரண்டுமே கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளிட்ட மாநிலங்களில் இந்த விதி ஜூலை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

ALSO READ | சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தகவல்!!

முனைவர் பட்டம் மட்டும் பெற்று உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர்களும், முனைவர் பட்டம் இல்லாமல் தகுதித் தேர்வில் மட்டும் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவர்களில் பலரும் ஆசிரியர் பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு எடுத்துள்ளது. கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு இது சரியான நடவடிக்கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், போதிய முன்னேற்பாடுகள் இன்றி இந்த சீர்திருத்தத்தை யு.ஜி.சி அறிமுகப்படுத்திருப்பது தான் தவறானதாகும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு தான். ஆனால், தமிழ்நாட்டிலேயே தரமான முனைவர்களை உருவாக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. கல்லூரிகள் முனைவர் பட்ட ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படுவதில்லை. பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் ஆகியோர் ஒரே நேரத்தில் முறையே 8 முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்ற விதி இருந்தது. அப்போதே முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு தகுதியான வழிகாட்டிகள் கிடைப்பதில்லை என்ற குறை இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த விதியை மாற்றிய யு.ஜி.சி, பேராசிரியர்கள் மட்டும் தான் 8 பேருக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்; இணைப் பேராசிரியர்கள் 6 பேருக்கும்,  உதவிப் பேராசிரியர்கள் 4 பேருக்கும் மட்டும் தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்ட முடியும் என்று அறிவித்தது. அதனால் முனைவர் பட்ட ஆய்வுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

அதுமட்டுமின்றி, பத்தாண்டுகளுக்கு முன்பு வரை முனைவர் பட்ட ஆய்வுக்கு திறமை மட்டும் போதுமானதாக இருந்தது. திறமை மட்டும் இருந்து விட்டால், சில ஆயிரம் செலவில் கூட முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள முடியும். ஆனால், இப்போது விதிகள் தலைகீழாக மாற்றப்பட்டு விட்டன. முனைவர் பட்ட ஆய்வுக்காக பதிவு செய்தல், ஆய்வு ஏட்டை தாக்கல் செய்தல், நேர்காணல் என ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் மாணவர்கள், ஆய்வுக்கட்டுரையை தாக்கல் செய்வதற்கு முன்பாக அதற்கென அங்கீகரிக்கப்பட்டுள்ள (Consortium for Academic Research and Ethics (CARE) list of journals) ஆய்வு இதழ்களில் குறைந்தபட்சம் இரு ஆய்வுக் கட்டுரைகளையாவது பதிப்பித்து இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆய்வுக் கட்டுரையை வெளியிடும் ஆய்வு இதழ்கள் அதற்கான கட்டணமாக லட்சக் கணக்கில் வசூலிக்கின்றன. மேலும் ஆய்வு இதழ்களில் ஆய்வுக் கட்டுரை வெளியாவதற்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய நிபந்தனைகளால் முனைவர் பட்டம் பெறுவதென்பது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறி விட்டது.

இந்த நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் களையாமல் உதவிப்பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயம் என்ற நிபந்தனையை விதிப்பது நியாயமல்ல. இந்த நிபந்தனையால் தரமான ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். அது கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக கல்வித் தரத்தைக் குறைத்து விடும். எனவே, முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் போக்க வேண்டும். முனைவர் பட்டம் மேற்கொள்வதற்கான செலவுகளையும் குறைக்க வேண்டும். இதை செய்து, அதன்பின் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு உதவிப் பேராசிரியர் பணிக்கு  முனைவர் பட்டம் கட்டாயமாக்கப்பட்டால், அது உயர்கல்வி தரத்தை உயர்த்த உதவியாக இருக்கும் என்றார்.

ALSO READ | ஏழை மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் BJP அரசு: MKS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News