திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்....

திருவாரூரில் புயலால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தோரின் முழு விவரம் அறிய கால அவகாசம் தேவை.....

Last Updated : Jan 7, 2019, 11:12 AM IST
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்.... title=

திருவாரூரில் புயலால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்தோரின் முழு விவரம் அறிய கால அவகாசம் தேவை.....

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 28 -ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில்,இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம் அளித்துள்ளது. கலைஞர் மறைவால் காலியாக திருவாரூர் தொகுதிக்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும், எனவே திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜனவரி 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்களாகும் என குறிப்பிட்டிருந்தார் எனவும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருவாரூர் தொகுதிக்கும், இதேபோல பிற 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கருத்துகேட்டபோது, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான காலஅவகாசம் குறித்து மாநில அரசுதான் சரியாக கணிக்க முடியும் என தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

திருவாரூரில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளில் அரசு எந்திரம் ஈடுபட்டிருப்பது மற்றும் பலர் தற்காலிகமாக இடம்பெயர்ந்திருப்பதை காரணம் காட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் மின்னஞ்சல் மூலமாகவும், நேரில் சந்தித்தும் இடைத்தேர்தலை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு  அறிக்கை அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண விநியோகப் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை, தேர்தல் பணியாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, தேர்தல் நடத்துவதற்கான காலகட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள், பொங்கல் திருநாள் வருகிறது, மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலை, இடம்பெயர்ந்திருப்பவர்கள் குறித்த விவரங்களை திரட்ட காலஅவகாசம் தேவை உள்ளிட்ட காரணங்களால் தேர்தலில் மக்கள் பங்களிப்பு பாதிக்கப்படலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரின எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியிருந்தார். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, தமிழக அரசும், திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை தொடர முடியாது என கருதுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்காக ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையும், தேர்தல் நடத்துவதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  ரத்து செய்யப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

சுதந்திரமாகவும், அமைதியாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் ஏற்படும்போது உரிய காலகட்டத்தில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

 

Trending News