சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: PMK

ஏஏழைகளை பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 13, 2019, 11:45 AM IST
சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும்: PMK title=

ஏஏழைகளை பலி வாங்கும் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., 

விழுப்புரம் சிற்றேரிக்கரையை சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி ஒருவர் 3 இலக்க பரிசுச் சீட்டுகளை வாங்கி கடனாளி ஆனதால், 3 குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார் என்று வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விழுப்புரம் சிற்றேரிக்கரைப் பகுதியில் உள்ள சலாமத் நகரைச் சேர்ந்த பொற்கொல்லரான அருண் என்பவர் 3 இலக்க பரிசுச்சீட்டுகளை வாங்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் ரூ.5,000 வரைக்கும் பரிசுச்சீட்டுகளை வாங்கி வந்த அவர், எதிர்பார்த்த அளவுக்கு பரிசு கிடைக்காததால்  பல லட்சங்களுக்கு கடனாளி ஆனார். தொழிலும் இழப்பு ஏற்பட்ட நிலையில், தமக்கு சொந்தமான வீட்டை ரூ.50 லட்சத்துக்கு விற்பனை செய்து கடன்களை அடைத்துள்ளார். அதன்பின்னர் நகை செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர், தொடர்ந்து பரிசுச் சீட்டுகளை வாங்கி கடனாளி ஆனார். அந்த கடன்களை அடைக்க வழி இல்லாததால் 3 மாத கைக்குழந்தை,  3 வயது குழந்தை, 5 வயது குழந்தை என மூன்று பெண் குழந்தைகளுக்கு சயனைடு விஷத்தைக் கொடுத்து கொலை செய்து விட்டு, மனைவியுடன்விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்லும் காணொலிக் காட்சிகளையும் அவர் வாட்ஸ் ஆப் மூலம் வெளியிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளுக்கு அடிமையான அவர், எந்த அளவுக்கு இழப்புகளை சந்தித்து, விரக்திக்கு ஆளாகியிருந்தால், 3 மாத கைக்குழந்தையைக் கூட கொலை செய்து விட்டு தற்கொலை  செய்து கொண்டிருப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்தால், தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் சமூகத்தில்  எந்த அளவுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும். தடை செய்யப்பட்ட  இத்தகைய பரிசுச் சீட்டுகளின் சட்டவிரோத விற்பனை தடுக்கப்படாதது தான் இதற்கு காரணமாகும்.

நகை செய்யும் தொழிலாளி அருண் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது 3 இலக்க பரிசுச்சீட்டால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு ஒரு சிறு உதாரணம் மட்டும் தான். தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இந்த பரிசுச் சீட்டுகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்ட, வட்ட தலைநகரங்களிலும் இத்தகைய பரிசுச்சீட்டுகள் தடையின்றி விற்கப்படுகின்றன. இந்த வகை பரிசுச்சீட்டுகள் அச்சிடப்படாமல் துண்டுச்சீட்டுகளில் எழுதி விற்பனை செய்யப்படுகின்றன.

மாநில அரசுகளின் மூலம் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படும் பரிசுச்சீட்டுகள் தமிழ்நாட்டில்  சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை மீறுவோர் எந்த சட்டப்பிரிவுகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதே பிரிவுகளை பயன்படுத்தி 3 இலக்க பரிசுச்சீட்டுகளை விற்போர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், 3 இலக்க பரிசுச்சீட்டுகளை விற்பனை செய்வோரை தண்டிக்க சரியான சட்டப்பிரிவுகள் இல்லை என்று கூறி, இத்தகைய அத்துமீறலை காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த அலட்சியம் தான் சட்டவிரோத பரிசுச்சீட்டுகளை ஊக்குவிக்கிறது.

பரிசுச்சீட்டுகள் அன்றாட கூலித் தொழிலாளர்களை குறிவைத்தே புழக்கத்தில் விடப்படுகின்றன. இவை யாரோ ஒரு பணக்காரரை கோடீஸ்வரராக்கி, கோடிக்கணக்கான ஏழைகளை நடுத்தெருவுக்கு இழுத்து வருகின்றன. அதனால் தான் தமிழ்நாட்டில் பரிசுச்சீட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக போராடி வந்தது. அதன் பயனாகத் தான் 2003-ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் பரிசுச்சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது. ஆனால், அன்று முதல் இன்று வரை கள்ளச் சந்தையில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சென்னை போன்ற நகரங்களில் ஓர் இலக்க பரிசுச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு நாளும்  பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அருணைப் போலவே தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஏழைகள் பரிசுச்சீட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுகுறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டால் அது பெரும் அதிர்ச்சியை அளிக்கும்.

2003-ஆம் ஆண்டில் பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்ட போது, அதை நம்பியிருந்த லட்சக்கணக்கான  விற்பனையாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்கள் செய்து தரப்படாததால், அவர்களில் பலர் வேறு  வழியின்றி சட்டவிரோத பரிசுச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலமாக மட்டும் தான் பரிசுச்சீட்டு விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே, தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் ஏழைகளை பலிவாங்கும் பரிசுச்சீட்டு விற்பனையை அரசு தடுக்க வேண்டும். 

என குறிப்பிட்டுள்ளார்.

Trending News