கொரோனா தடுப்பூசி மையம், சிகிச்சை மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. பல வித முறைகளில் மக்களுக்கு தொற்று குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 27, 2021, 04:03 PM IST
  • கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் தீயாய் பரவி வருகிறது.
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி மையம், சிகிச்சை மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் title=

சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டில் தீயாய் பரவி வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தும் செயல்முறை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, தொற்றின் பரவலைத் தடுக்கவும் பல வித முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் தொற்றின் அளவில் சிறிய அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், தொற்றின் அளவு பொதுப்படையாக பார்க்கும்போது மிகவும் அதிகமாகவே உள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலைத் தடுக்க, அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. பல வித முறைகளில் மக்களுக்கு தொற்று குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகின்றது.

தடுப்பூசி செயல்முறையும் தமிழகத்தில் துரிதமாக நடந்து வருகிறது. அரசு சார்பில், பல பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மக்களை கேட்டுகொண்டு பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை பிராட்வே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். முதல் கட்டமாக, அங்கு 500-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு முறைகளில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பூசி (Vaccine) முகாமை திறந்துவைத்த பின்னர், அந்த பள்ளிக்கு அருகில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அந்த கல்லூரி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த மையம் ஆக்சிஜன் வசதி கொண்ட 100 படுக்கைகளுடன் செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சிகிச்சை மையத்தில் 8 மருத்துவர்களும், 14 செவிலியர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை மையத்தை துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 

ALSO READ: செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம், பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

புதனன்று தமிழ்நாட்டில் 33,764 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று மட்டும் 475 பேர் இறந்தனர். கடந்த பத்து நாட்களில் நேற்றுதான் மிக அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 29,717 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 33,10,224 ஆக உள்ளது.

ALSO READ: கொரோனா தடுப்பூசி வீணடிப்பு பட்டியலில் தமிழகம் 3ம் இடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News