1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 6, 2021, 02:55 PM IST
1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை title=

சென்னை: 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 12 ஆம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதாவது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வித்துறை இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர்.

முன்னதாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இதற்கு மத்தியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நவம்பர் 1-லிருந்து முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ALSO READ | 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும்: தமிழக அரசு

மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.  அதே போல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல்  8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.

பள்ளிகள் திறப்பது குறித்த வழிகாட்டு நடைமுறைகள்:

மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

 - கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).   

 - கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

 - அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.  

 - கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

ALSO READ | Reduced syllabus: 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

 - நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

 - கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

 - நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

 - நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

 - கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய  கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா 3-வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News