முன்விரோதம் காரணமாகக் காவு வாங்கப்பட்ட இரு உயிர்கள்..! முழுப்பின்னணி என்ன ?

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக விவசாயியைக் கொலை செய்யத் துணிந்த நபரும், அதைத் தடுக்க சென்றவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 9, 2022, 07:26 PM IST
  • இரு உயிர்களைக் காவு வாங்கிய முன்விரோதம்..!
  • கரண்ட சாக் கொடுத்துக் கொல்ல முயன்ற கொடூரம்..!
  • திட்டம் போட்டவரும் தடுக்க முயன்றவரும் பலி..!
முன்விரோதம் காரணமாகக் காவு வாங்கப்பட்ட இரு உயிர்கள்..! முழுப்பின்னணி என்ன ? title=

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ளது சொரகுளத்தூர் கிராமம். நடு இரவில் நடந்த பயங்கர சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் குலை நடுங்க வைத்துள்ளது. ஆள் நடமாட்டமின்றி மயானமான கிராமத்தில் என்ன நடந்தது என்று விசாரிக்கச் சென்றோம். ஊருக்கு மத்தியில் இருக்கும் சரண்ராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை கைகாட்டினார்கள். அவரது நிலத்தை நெருங்கினோம்... அங்கிருந்த மாட்டுக் கொட்டகையில், சில மர்மமான தடையங்கள் கண்ணுக்குத் தென்பட்டது.மாட்டுக்கொட்டகையில் ஒரு இரும்பு கட்டிலும், மனித கால்கள் தடங்களும், அதனருகே மின்சார ஒயர் கம்பிகளும் கிடந்தது. ஆம், உயிர்பலி... 

Thiruvannamalai

நிலத்தின் உரிமையாளர் சரண்ராஜை அழைத்து விசாரித்தோம். அரண்டு கிடந்தவர், அடுத்தடுத்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்துவிட்டார். அதே சொரகுளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகோபால். ஆடு மாடுகளை வளர்த்து பணம் பார்ப்பவர், விவசாயம் பார்த்து வருகிறார். சரண்ராஜுக்கும் ரேணுகோபாலுக்கும் மாடு மேய்ப்பது தொடர்பாக நீண்ட காலமாகப் பிரச்சினை நிலவி வருகிறது. இதில் தீராப்பகையை வளர்த்துக்கொண்ட சரண்ராஜ் பல முறை ரேணுகோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாடு மேய்ப்பது தொடர்பாக மீண்டும் இருவருக்கு நடுவே பூகம்பம் வெடித்தது.

இம்முறை பகையின் ஆழமும், உருவமும் ரேணுகோபாலை வெறிபிடிக்க வைத்தது. வாய் சண்டை முடிந்து வீட்டிற்கு சென்றவர், நடுஇரவில் ஒரு கொலைகார திட்டத்தைப் போட்டிருக்கிறார். வீட்டிலிருந்த மின்சார ஒயரை கையில் எடுத்தவர், தினமும் இரும்பு கட்டிலில் படுத்துறங்கும் சரண்ராஜுக்கு கரண்ட் சாக் கொடுத்து தீர்த்துக்கட்ட முடிவெடுத்து, நடுஇரவில் புறப்பட்டுச் சென்றார். மின்சாரப்பெட்டியில் இணைப்பு கொடுத்து ஒயரோடு இரும்பு கட்டிலை நெருங்கியவர் ஆக்ரோஷத்தில் கத்த, உஷாரான சரண்ராஜ் அதிர்ச்சியில் தானும் சேர்ந்து கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழுமலை என்பவரும் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். 

elumalai death

மேலும் படிக்க | மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்

அப்போது தான் அந்த கொடூரம் அரங்கேறியது..! மின்சார ஒயருடன் நின்றுகொண்டிருப்பது தெரியாமல் ரேணுகோபாலை தடுக்க போனவர், ஒயரை பிடிக்க அது அவரை நிலைதடுமாற வைத்தது.அதில், ஏழுமலையின் கைப்பட்டு ரேணுகோபாலின் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பதறிப்போன சரண்ராஜ், பொதுமக்களைக் கூப்பிடுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. ஆம், மின்சாரம் பாய்ந்து ரேணுகோபால், ஏழுமலை இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

Renugopal death

மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இதனையடுத்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்து, உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நிலத்தின் உரிமையாளர் சரண்ராஜிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தான் தோண்டிய குழியில் தானே விழுந்து சடலமான ரேணுகோபாலும், தடுக்க சென்று உயிரை விட்ட ஏழுமலையும் சொரகுளத்தூரை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News