கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு வர வேண்டாம்! கோயில் நிர்வாகம்!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் இன்று மற்றும் நாளை வரவேண்டாம் என சபரிமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2018, 08:55 AM IST
கேரளாவில் கனமழை: சபரிமலைக்கு வர வேண்டாம்! கோயில் நிர்வாகம்! title=

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் இன்று மற்றும் நாளை வரவேண்டாம் என சபரிமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட் 8 முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் கிழக்கு கேரளா பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் மற்றும் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக இராணுவம் சிறிய பாலங்களைக் கட்டி வருகின்றன. வெள்ள அபாயம் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் என்.டி.ஆர்.எஃப் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், அரசியல் கட்சிகள் பலவும் நிவாரண நிதி அளித்து வருகின்றன. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் உதவியுடன் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர் KJ அல்போன்ஸ் ஆகியோரும் உடன் இருந்தனர். மேலும் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.100 கோடி கேரள அரசுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் கேரளாவில் தொடரும் கன மழை காரணமாக பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக நிறைபுத்தரிசி பூஜைக்காக இன்று மற்றும் நாளை பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம். மீறி வருபவர்கள் எரிமேலி, பத்தினம்திட்டா, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர் என சபரிமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Trending News