டெல்லி தேர்தல்: வாக்கு சதவீதம் அறிவிக்காத தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது கடும் சர்ச்சையாகி உள்ளது.

Last Updated : Feb 9, 2020, 05:13 PM IST
டெல்லி தேர்தல்: வாக்கு சதவீதம் அறிவிக்காத தேர்தல் ஆணையத்தால் சர்ச்சை title=

டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது கடும் சர்ச்சையாகி உள்ளது.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர். புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் அன்று இரவே அறிவிப்பதுதான் வழக்கம். ஆனால் டெல்லியில் தற்போது வரை எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் மொத்தம் பதிவான வாக்குகள் சதவீதத்தை அறிவிக்காதது ஏன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Trending News