காஷ்மீர் விவகாரத்தில் வெளி சக்திகள் தலையீடு: மெஹபூபா முஃப்தி

Last Updated : Jul 16, 2017, 10:02 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் வெளி சக்திகள் தலையீடு: மெஹபூபா முஃப்தி title=

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் வெளிநாட்டுகள் தலையிட்டு பிரச்னையை ஏற்படுத்துவதாக அம்மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் காஷ்மீர் பிராந்தியத் தளபதி பர்ஹான் வானி கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புல்வாமா, குல்காம், சோபியான், அனந்த்நாக் ஆகிய 4 மாவட்டங்களிலும் வன்முறை வெடித்தது. 

அதன்பிறகும், காஷ்மீரின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் மீதான போராட்டக்காரர்களின் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தபடி உள்ளது. இந்நிலையில், அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த குஜராத் மாநில பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் கடந்த திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 

இந்நிலையில் சனிக்கிழமை அன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மெஹபூபா முஃப்தி சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்து அவர் விவாதித்தார். குறிப்பாக, அமர்நாத் யாத்திரை சபவத்தை பற்றி ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறிது:

காஷ்மீர் விவகாரம் என்பது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது கிடையாது. அந்தப் பிரச்னைக்கு வெளிநாட்டு சக்திகள்தான் காரணம். ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதிகள், ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். துரதிருஷ்டவசமாக, காஷ்மீர் விவகாரத்தில் தற்போது சீனாவும் தலையிடத் தொடங்கியுள்ளது.

நாட்டில் மத ரீதியிலான பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்துடனேயே, அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த துயரத்தில் இருந்து நாங்கள் வெளியே வருவதற்கு, ஒட்டுமொத்த நாடு, அரசியல் கட்சிகள், மத்திய அரசு, குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும், அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீர்த்துப் போகாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், அந்த சட்டப் பிரிவானது, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் உணர்வோடு சம்பந்தப்பட்டது ஆகும். இதேபோல், குடியரசுத் தலைவர் தனது உத்தரவில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாது என்று தெரிவித்திருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றார் மெஹபூபா முஃப்தி.

Trending News