ரஷிய தாக்குதலில் இந்திய மாணவர் உயிர் இழந்தது எப்படி...? முழு விவரம்

உக்ரைனில் மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Shiva Murugesan | Last Updated : Mar 1, 2022, 07:15 PM IST
  • ரஷிய தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் உயிரிழந்தார்.
  • ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்தது.
  • சுமார் 16,000 இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
ரஷிய தாக்குதலில் இந்திய மாணவர் உயிர் இழந்தது எப்படி...? முழு விவரம் title=

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். 

அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.

இந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ஏவுகணை வீசப்பட்டது.

மேலும் படிக்க: Breaking: உக்ரைன்: ரஷ்ய குண்டுவீச்சில் இந்திய மாணவர் உயிரிழப்பு

அதே போல் கிவ் நகர் அருகே உள்ள எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் எரிவாயு குழாயில் இருந்து நச்சுபுகை வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. நேற்றும் கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் தொடர்ந்து சண்டைகள் நடந்தன.

இந்த நிலையில் ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று ரஷியாவின் தாக்குதலின் தீவிரம் சற்று குறைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்து இருந்தது.

ஆனால் நள்ளிரவு முதல் ரஷியாவின் தாக்குதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பல இடங்களில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இன்று காலை கார்கிவ் நகரில் ரஷிய ஷெல் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை கார்கிவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் ஷெல் தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?

கர்நாடகவை சேர்ந்த  நவீன் சேகரப்பா என்ற இந்திய மாணவர், கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதற்காக ரெயில் நிலையம் செல்லும் போது குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் சிக்கியிருந்த கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் மேற்கு எல்லையை அடைய எல்விவ் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, ரஷ்ய குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். அந்த மாணவரின் பெயர் நவீன் என்றும், அவர் உக்ரைனில் படித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது. நவீன் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "இது ஒரு மோசமான சோகம். பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது இதயம் துடிக்கிறது. அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நாம் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க: இந்தியா-பாக் போரில் இந்தியாவை சுற்றி வளைத்த உலக நாடுகள்; நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

தமிழக மாணவர்கள் 2 ஆயிரம் பேர் உள்பட சுமார் 16,000 இந்திய மாணவர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த வியாழன் அன்று ரஷிய தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல மாணவர்கள் மறைந்திருக்கும் நிலத்தடி பதுங்கு குழிகள், மெட்ரோ நிலையங்களளில் தங்கி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை 8,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் பல இந்திய மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் அவர்கள் மேற்கு எல்லைகளை அடைய சாலை வழியாகச் செல்வது கடினமாக உள்ளது. மாணவர்களும் துணை இல்லாத நிலையில்  எல்லைகளுக்கு நடந்து செல்கின்றனர்.

நேற்று, தூதரகம் மாணவர்களை கீவில் உள்ள ரயில் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறியது. அங்கு மக்களை மேற்குப் பகுதிக்கு அழைத்துச் செல்ல உக்ரைனால் சிறப்பு வெளியேற்ற ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் பாஸ்போர்ட், போதுமான பணம் மற்றும் சரியான சூடான ஆடைகளை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மேலும் படிக்க: உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?

பல மாணவர்கள் தங்களை ரெயில்களில் ஏற அனுமதிக்கவில்லை அல்லது அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாக புகார் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், கீவில் இருந்து மேற்கு உக்ரைனை நோக்கி நேற்று 1,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்றதாக தூதரகம் உறுதிப்படுத்தி உள்ளது.  கடந்த வாரம் முதல் தூதரகத்திற்கு அருகில் உள்ள சுமார் 400 மாணவர்கள் உள்ளனர்.

ஆபரேஷன் கங்காவின் கீழ் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு இந்திய மாணவர்கள் ஹங்கேரி, போலந்து, ருமேனியா, சுலோவாகிய குடியரசு என உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்து நாடுகளை நோக்கி உக்ரைனின் சிக்கி உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

மேலும் படிக்க: உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News