தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 234-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இது முதல் முறையாகும். முன்னதாக நேற்றைய தினம் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்.,
தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று திரும்பி வந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து தற்போது தமிழகத்தில் மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்மாவையும், ஒருவர் இந்தோனேசியாவையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைப்பெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாக முன்வந்து பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை முன்வைத்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,103 பேர் மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்துள்ளனர்.
அவர்களில் 658 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களுக்கு நாளைக்குள் பரிசோதனை செய்து முடிக்கப்படும் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.