'முதலமைச்சரே காதை கூர்மையாக்கி கேளுங்க' - திட்டங்களின் பட்டியலை அடுக்கிய அமித்ஷா!

Amit Shah In Vellore: திமுகவும் காங்கிரஸ் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஊழல் செய்து வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 11, 2023, 08:16 PM IST
  • காங்கிரஸ் - திமுக கூட்டணி 2ஜி, 3ஜி , 4ஜி ஊழல் செய்யும் கட்சி - அமித்ஷா
  • தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ரூ. 12 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தனர் - அமித்ஷா
  • தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன் - அமித்ஷா
'முதலமைச்சரே காதை கூர்மையாக்கி கேளுங்க' - திட்டங்களின் பட்டியலை அடுக்கிய அமித்ஷா! title=

Amit Shah In Vellore: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க பொது கூட்டம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணை தலைவர் நரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் மனோகரன், வெங்கடேசன், வாசுதேவன் உள்ளிட்டோரும் மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் உள்ளிட்ட திரளான பாஜகவினர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்துகொண்டு பேசுகையில்,"திரளான பாஜகவினர் கூடியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரதத்தின் தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் மன்னிப்பு கேட்கிறேன். 

இந்த வேலூரில் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை வணங்குகிறேன். நான் இங்கு வந்திருப்பதற்கான காரணம் பிரதமர் மோடி 9 ஆண்டு ஆட்சிக்கு தமிழக மக்கள் தந்த ஒத்துழைப்புக்கு நன்றி கூறுவதற்கு. தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ரூ. 12 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் கூட கிடையாது. 

இந்தியாவை நம் அரசு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழர்களின் தொன்மையான சோழ சாம்ராஜ்ய செங்கோலை வைத்து பெருமை சேர்த்துள்ளது. மத்திய மோடி அரசு மீண்டும் 2024ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசு மூன்றாவது முறையாக உருவாகும். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது பாஜக அரசு...? - அமித்ஷாவுக்கு ஓபன் சவால் விட்ட ஸ்டாலின்!

2024ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் ஆர்வாதத்துடன் பாஜக கூட்டணி 25 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற செய்ய வேண்டும். பாஜக கூட்டணி தமிழகத்தில் போட்டியிடுபவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற போகிறார்கள். பிரதமர் மோடி தமிழ் மொழியையும் சிறப்பையும் மேம்படுத்த பல சிறப்புகளை சேர்த்துள்ளார். 

பிரதமர் எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழின் பெருமையை பேசியுள்ளார். தமிழ் சங்கமம் விழாவை காசியில் நடத்தினார், சௌராஷ்டிரா தமிழ் சங்கமும் நடத்தினார். பிரதமர் திருக்குறளையும் பன்மொழியில் மொழி பெயர்த்து எல்லா மாநில மக்களும் படிக்கும் வகையில் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளார். பப்புவா ஜெனிவா நாட்டிலும் திருக்குறளின் பெருமையை பிரதமர் பேசியுள்ளார். 

நீட் தேர்வு அகில இந்திய தேர்வுகளை எல்லாம் தமிழிலும் எழுதும் வகையில் நாங்கள் வழிவகை செய்துள்ளோம். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதனை செய்யவில்லை. நாங்கள் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். சீன அதிபர் இந்தியா வந்தபோது பிரதமர் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தார். ஸ்டாலின் சொல்கிறார், நாங்கள் 10 ஆண்டுகளில் என்ன செய்தோம் என்றும் பிரதமர் மோடி என்ன செய்தார் என்றும் கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே உங்கள் காதுகளை வைத்து கூர்ந்து கேளுங்கள். காங்கிரஸ் - திமுக கூட்டணி 10 ஆண்டுகாலத்தில் பங்களிப்பு ரூ. 95 ஆயிரம் கோடி. ஆனால் பாஜக தமிழகத்திற்கு வழங்கியது 2.27 லட்சம் கோடி. 

நாங்கள் தமிழகத்திற்கு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். 9 ஆண்டுகளில் மோடி ரூ.2.35 லட்சம் கோடியை தமிழகத்திற்கு மானியமாக வழங்கியுள்ளோம். ரூ.50 ஆயிரம் கோடி சென்னை - பெங்களூர் விரைவு பாதை திட்டம் தயாரிக்கபட்டுள்ளது. மெட்ரோ ரயில் 2 கட்டங்களுக்கும் ரூ.72 ஆயிரம் கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 3500 கோடியில் சென்னை, காட்பாடி, மதுரை போன்ற ரயில் நிலையங்கள் புதியதாக கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

2 வந்தே பாரத் ரயில்களும் தமிழகத்தில் இயக்கபடுகிறது. சென்னை விமான நிலையம் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி ஆராய்ச்சிக்காக புதிய கட்டடம் கட்டியுள்ளோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் திறக்கவில்லை என என்னை கேட்கிறார்கள். ஆனால் அதனை திமுகவினர் தான் சொல்ல வேண்டும். 18 ஆண்டுகாலமாக மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏன் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கொண்டு வரவில்லை.

கோயம்புத்தூரில் புதிய இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவ கல்லூரி ரூ. 1500 கோடியில் தொடங்கபடவுள்ளது. 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் துவங்கியுள்ளோம். பாதுகாப்பு முணையம் தமிழகத்தில் அமைத்துள்ளோம். ஆனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி 2ஜி, 3ஜி , 4ஜி ஊழல் செய்யும் கட்சி. 2ஜி என்றால் இரண்டு தலைமுறை ஊழல், 3ஜி மூன்று தலைமுறை ஊழல், 4ஜி நான் கு தலைமுறை ஆட்சி ஊழல். 2ஜி என்றால் மாறன் குடும்பம். 3ஜி என்றால் கருணாநிதி குடும்பம், மூன்று தலைமுறையாக ஊழல் செய்கிறது. 4ஜி என்றால் காங்கிரஸ் கட்சி. ராகுல் காந்தி வரையில் நான்கு தலைமுறைகளாக ஊழல் செய்து வருகின்றனர். 

காஷ்மீரை மீட்டோம், காங்கிரஸ் உள்ளிட்ட அரசுகள் அங்கு கைவக்க அச்சப்பட்டது. ஆனால் அதனை துணிச்சலுடன் பாரதத்துடன் மோடி இணைத்தார். 2024இல் மக்களவை தேர்தலில் மீண்டும் 300-க்கும் அதிகமான சீட்டுக்களை பெற்று மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் இருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் செங்கோலுக்கு கீழ் அமர்ந்து பணியாற்ற அனுப்புங்கள் வேலூர் தொகுதியையும் பாஜக வெல்லும்" என்றார். இக்கூட்டத்தில் முன்னதாக அமித்ஷா மேடை அருகே இருந்த பெரிய அளவிலான பேனர் திடீரென தானே கிழிந்து தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | "அவன் மாட்டிக்கிட்டான்" அமைச்சர் செந்தில் பாலாஜியை திட்டி தீர்த்த டாஸ்மாக் ஊழியர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News